என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    உடுமலை அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு
    X

    உடுமலை அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு

    • பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் மருத்துவமனையில் 8 மாத காலமாக எந்திரம் சரி செய்யப்படாமல் இருப்பது ஏன்?
    • மாதந்தோறும் அரசு மருத்துவமனைக்கு வருகை புரிந்து அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு தினமும் உடுமலை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் , மலைவாழ் மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்தநிலையில் இன்று திடீரென தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடுமலை அரசு மருத்துவமனையில் திடீரென ஆய்வு பணியில் ஈடுபட்டார்.

    மருத்துவமனைக்குட்பட்ட அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு, உணவு தயாரிக்கும் இடம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் காயம் அடைந்தவருக்கு செவிலியர் சிகிச்சை அளிக்காமல் மருத்துவ பணியாளர் சிகிச்சை அளித்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    உடனே செவிலியரை அழைத்து அறிவுரைகள் கூறி சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். மேலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் பராமரிப்பு இல்லாமல் இருந்தது குறித்து மாவட்ட மருத்துவ இயக்குனரிடம் கேட்டறிந்தார். பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் மருத்துவமனையில் 8 மாத காலமாக எந்திரம் சரி செய்யப்படாமல் இருப்பது ஏன்? அவ்வப்போது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அவசர சிகிச்சை பகுதிகளில் ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் ஒரே இடத்தில் ஏன் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. அரசு மருத்துவமனையை நீங்கள் ஆய்வு செய்தீர்களா? என கேள்வி எழுப்பினார். மாதந்தோறும் அரசு மருத்துவமனைக்கு வருகை புரிந்து அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்ய வேண்டும். அவசர சிகிச்சை பிரிவு முன்புறம் ஏன் வீல் சேர் வைக்கவில்லை. இதுபோன்ற செயல்கள் இனி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.

    உடுமலை அருகே நேற்றிரவு சிறுவனை சிகிச்சைக்காக அழைத்து சென்ற போது மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்தநிலையில் இன்று உடுமலை அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீரென ஆய்வு செய்த சம்பவம் மருத்துவ பணியாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×