என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 119.60 அடியாக குறைந்தது
- கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- அணையில் தற்போது 92.83 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பியது. இதையடுத்து அந்த அணைகளுக்கு வந்த உபரிநீர் அப்படியே காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறக்கப்பட்டது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து கடந்த 29-ந் தேதி மேட்டூர் அணை நிரம்பியது.
இதையடுத்து அணைக்கு வந்த தண்ணீர் அப்படியே உபரிநீராக 16 கண் மதகு வழியாக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக 58 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டு காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில கர்நாடகாவில் மழை குறைந்ததால் அணைக்கு வரும் தண்ணீரும் குறைய தொடங்கியது.
அணைக்கு நேற்று வினாடிக்கு 18 ஆயிரத்து 615கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று அது 19 ஆயிரத்து 286 கனஅடியாக சற்று அதிகரித்து வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் 16 கண்மதகு வழியாக தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.60 அடியாக குறைந்தது. அணையில் தற்போது 92.83 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.






