என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் நாளை உருவாகிறது
- வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கு சாதகமான சூழல் உருவாகி உள்ளது.
- வடசென்னையில் இன்று காலை மிக கனமழை பெய்தது.
சென்னை:
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி சமீபத்தில் உருவானது. இதன் காரணமாக வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாவதற்கு சாதகமான சூழல் உருவாகி உள்ளது.
அனேகமாக நாளை (வெள்ளிக்கிழமை) வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது இந்த வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். 10-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் அது கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிலும் இந்த அமைப்பு வட தமிழகம் நோக்கி நகர்ந்தால், அடுத்த வாரம் சென்னை உள்பட வட தமிழக மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதற்கிடையே இன்று முதல் வருகிற 12-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
இன்று (வியாழக்கிழமை) காலை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.
வடசென்னையில் இன்று காலை மிக கனமழை பெய்தது. திருவொற்றியூர், புது வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, மணலி, ராயபுரம், காசிமேடு பகுதிகளில் காலை நீண்ட நேரம் மழை பெய்தது. இதனால் வட சென்னையில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளானார்கள்.
நாளை (வெள்ளிக்கிழமை) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.






