என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

Gas Shortage | அமெரிக்கா - ஈரான் போர் எதிரொலி: தமிழகத்தில் வணிக சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தம்
- போதிய அளவில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
- மும்பை, பெங்களூருவில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் விநியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி உள்ளன.
சென்னை:
அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்துகின்றன. அதற்கு, ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.
இதனால் சர்வதேச அளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போர் சூழல் காரணமாக, அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் வரத்து குறைந்துள்ளது.
நாடு முழுவதும் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சமையல் கியாஸ் சிலிண்டர்களை இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விற்கின்றன.
வீடுகளில் 2 சமையல் கியாஸ் சிலிண்டர் வைத்திருப்பவர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை சிலிண்டர் முன்பதிவு செய்து வாங்கலாம். வணிக பயன்பாட்டிற்கு தேவைக்கு ஏற்ப சிலிண்டர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் வீடுகளுக்கான சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடின்றி கிடைக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளன.
ஒரு சிலிண்டரை வாங்கிய பிறகு மற்றொரு சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளியை மத்திய அரசு 25 நாட்களாக நீட்டித்து அறிவித்துள்ளது. மேலும் தட்டுப்பாட்டை குறைக்க வீட்டு உபயோக சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
போதிய அளவில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சமமான பெட்ரோலிய பொருட்கள் விநியோகத்தை சீரமைக்கும் வகையில், சமையல் எரிவாயு, சிலிண்டர் விநியோகத்தை ஒழுங்குபடுத்த அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை மத்திய அரசு தீவிரமாக நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
கள்ளச்சந்தையில் பதுக்கி கியாஸ் சிலிண்டரை விற்றால் இந்த சட்டத்தின் கீழ் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் மத்திய அரசு எச்சரித்து உள்ளது.
இந்த நிலையில் வீடுகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் சமையல் கியாஸ் விநியோக்கும் வகையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் விநியோகத்தை நிறுத்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
அதன்படி மும்பை, பெங்களூருவில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் விநியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி உள்ளன. இதன் காரணமாக பெங்களூருவில் நாளை முதல் உணவகங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையிலும் ஓட்டல்களுக்கான வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டிருப்பதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னையிலும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அத்தியாவசிய சேவை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
வீட்டு உபயோக சிலிண்டர்கள் தொடர்ந்து விநியோகம் செய்யப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் உறுதியளித்து உள்ளன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சென்னை மண்டலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''உலகளாவிய அரசியல் சூழலால் சிலிண்டர் எரிவாயு விநியோகச் சங்கிலியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடு எதிரொலியாக தொழில், வணிக வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே வணிக சிலிண்டர்கள் பற்றாக்குறை தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை ஓட்டல்கள் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது. மின்சார அடுப்பு போன்ற வசதிகளை கொண்ட ஓட்டல்கள் ஓரளவுக்கு தாக்குப் பிடிக்கலாம் எனவும், கியாஸ் சிலிண்டரை மட்டுமே நம்பியிருக்கும் சிறிய ஓட்டல்கள் பாதிக்கப்படும் எனவும் ஓட்டல்கள் சங்கத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று கருதப்படுகிறது.
இது குறித்து கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர் சங்க தென் மண்டல செயலாளர் செந்தில் கூறுகையில், தென் மண்டலத்திற்கு உட்பட்ட தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களிலும் தினசரி ஒரு கியாஸ் டேங்கர் லாரிக்கு 18 டன் கியாஸ் வீதம் 1500 கியாஸ் டேங்கர் லாரிகளில் கியாஸ் நிரப்பப்பட்டு வீடுகள் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு விநியோகம் நடைபெற்று வருகிறது.
தென் மண்டலத்திற்கு உட்பட்ட 6 மாநிலங்களிலும் வீடுகளுக்கு தேவையான கியாஸ் சிலிண்டர்கள் இருப்பு 3 வாரங்களுக்கு போதுமான அளவு உள்ளது. ஓட்டல்கள், வர்த்தக நிறு வனங்களின் வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் இந்த வாரத்திற்கு தேவையான இருப்பு உள்ளது. அதற்குள் மத்திய அரசு மாற்று ஏற்பாடு செய்யும். இதனால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.






