என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    முதல் கட்டமாக பெசன்ட் நகர் கடலில் 46 ஆமை குஞ்சுகள் விடப்பட்டன
    X

    முதல் கட்டமாக பெசன்ட் நகர் கடலில் 46 ஆமை குஞ்சுகள் விடப்பட்டன

    • தமிழகத்தில் வனத்துறையினர் 10 கடலோர மாவட்டங்களில் 49 ஆமைகள் இனப்பெருக்க மையங்களை அமைத்துள்ளனர்.
    • கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்ட மற்றொரு ஆமையான மேகலை 2 முறை திரும்பி வந்து 211 முட்டையிட்டு இருக்கிறது.

    சோழிங்கநல்லூர்:

    "ஆலிவ் ரிட்லி"எனப்படும் கடல் ஆமைகள் ஆண்டு தோறும் டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை தமிழக கடற்கரை பகுதிகளுக்கு வந்து முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன.

    சென்னை கடற்கரைக்கு வரும் ஏராளமான ஆமைகள் சமீபகாலமாக இறப்பது அதிகரித்து வருகின்றன. ஆமைகள் கரை நோக்கி வரும்போது மீன்பிடி படகுகளில் அடிபட்டும், வலைகளில் சிக்கியும் அதிக அளவில் இறக்கின்றன. இதையடுத்து ஆமைகள் மற்றும் அதன் முட்டைகளை பாதுகாக்க வனத்துறையினர் தன்னார்வலர்களுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    கடற்கரையில் உள்ள ஆமை முட்டைகளை சேகரித்து அதனை குஞ்சு பொரிக்கும் இடத்திற்கு கொண்டு சென்று பாதுகாத்து வருகின்றனர். பின்னர் குஞ்சு பொரித்ததும் அதனை கடலில் விடுகிறார்கள்.

    அதன்படி இந்த ஆண்டு வனத்துறையின் மேற்பார்வையில் உள்ள பெசன்ட் நகர் குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாக்கப்பட்ட முட்டைகளில் இருந்து 46 ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள் பொரித்து உள்ளன. நல்ல நிலையில் இருந்த ஆமை குஞ்சுகள் முதல் கட்டமாக பெசன்ட்நகர் கடலில் விடப்பட்டது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, 94 முட்டைகள் பாதுகாக்கப்பட்டதில் தற்போது குஞ்சுகள் வெளிவந்து உள்ளன. மீதமுள்ள முட்டைகளில் இருந்து இன்னும் ஓரிரு நாளுக்குள் ஓடுகளை உடைத்துகொண்டு ஆமை குஞ்சுகள் வெளியே வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

    தமிழகத்தில் வனத்துறையினர் 10 கடலோர மாவட்டங்களில் 49 ஆமைகள் இனப்பெருக்க மையங்களை அமைத்துள்ளனர். இதுவரை நகரின் கடற்கரைகளில் ஆமைகள் முட்டையிடும் 209 இடங்கள் அடையாளம் காணப்பட்டு 24 ஆயிரத்து 531 முட்டைகள் சேகரிக்கப்பட்டது.

    அவை குஞ்சு பொரிப்பகங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளன. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெசன்ட்நகர் மற்றும் மெரினா கடற்கரைகளில் 18 இடங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முட்டைகளை வன ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சேகரித்து உள்ளனர்.

    பெசன்ட் நகர் கடற்கரையில் விடுவிக்கப்பட்ட கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்ட கயல் என்ற ஆமை சென்னை கடற்கரையில் 3 முறை திரும்பி வந்து முட்டையிட்டுள்ளது. இந்த சீசனில் மட்டும் 389 முட்டையிட்டு இருக்கிறது. இந்த ஆமை தெற்கு நோக்கி சென்ற பிறகும், முட்டையிட மீண்டும் சென்னையையே தேர்ந்தெடுத்து உள்ளது.

    இதேபோல் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்ட மற்றொரு ஆமையான மேகலை 2 முறை திரும்பி வந்து 211 முட்டையிட்டு இருக்கிறது. ஆமைகள் ஏற்கனவே இருந்த கடற்கரைக்கு திரும்பி வரும் என்பது தற்போது உண்மையாகி உள்ளது என்றார்.

    Next Story
    ×