என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அதிகனமழை எச்சரிக்கை... இன்று எந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தெரியுமா?
- ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளது.
- சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 16-ந்தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நேற்று முதல் தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில் 2 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டையில் இன்று அதிகனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






