என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பிள்ளையார்பட்டி கோவில் அறங்காவலர் நியமனத்தில் அறநிலையத்துறைக்கு தடை- மதுரை ஐகோர்ட் உத்தரவு
- சிலரையும் சட்ட விரோதமாக அறங்காவலர் பதவிக்கு நியமிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
- விதிமுறைகளின் படி எங்கள் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை அறங்காவலராக இந்த ஆண்டில் நியமிக்க உத்தரவிட வேண்டும்
மதுரை:
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோவில் பிரசித்தி பெற்றது. 1,300 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில் செட்டிநாடு நகரத்தார் சமூகத்தை சேர்ந்த 20 குடும்பத்தினரால் பாரம்பரியமாக சுழற்சி முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
1978-ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை அங்கீகரித்த திட்டப்படி, மேற்கண்ட 20 குடும்பத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 2 குடும்பத்தை சேர்ந்தவர்கள் கற்பக விநாயகர் கோவிலின் அறங்காவலர்களாக நியமிக்கப்பட வேண்டும். எங்கள் குடும்பத்தில் ஏற்கனவே அறங்காவலர்களாக பதவி வகித்து உள்ளனர்.
இந்தநிலையில் 2025-2026 ஆம் ஆண்டில் எங்களது குடும்பத்தினர் அறங்காவலர்களாக பதவி வகிக்க வேண்டும். ஏற்கனவே பதவியில் இருந்த கண்டவராயன்பட்டி சொக்கலிங்கத்தை அறநிலையத்துறை இணை கமிஷனர் தகுதிநீக்கம் செய்தார். அவருக்கு வேண்டிய நபரை அறங்காவலராக நியமித்து கோவில் ஆலோசனை கூட்டத்தின்போது பல்வேறு இடையூறுகளை செய்து வருகின்றனர்.
மேலும் சிலரையும் சட்ட விரோதமாக அறங்காவலர் பதவிக்கு நியமிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அறங்காவலர் தேர்வு செய்வதற்கான நடவடிக்கையில் ஐகோர்ட்டின் தீர்ப்பின்படி எந்த முடிவும் செய்யவில்லை. அதற்குள் அறங்காவலர்களை தேர்வு செய்ய தேர்தல் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். இது சட்டத்துக்கு புறம்பானது.
எனவே விதிமுறைகளின் படி எங்கள் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை அறங்காவலராக இந்த ஆண்டில் நியமிக்க உத்தரவிட வேண்டும். அதுவரை வேறு நபர்களை அறங்காவலர் பதவிக்கு நியமிக்க அறநிலையத்துறைக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பிள்ளையார் பட்டி கோவில் நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல், அறங்காவலர் நியமனத்தில் சட்டவிதிமுறைகள் மீறப்படவில்லை என்றார். அப்போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தமிழகத்திலேயே இந்த ஒரு கோவிலில் தான் நியாயமான நிர்வாகம் நடப்பதாக நினைத்து இருந்தேன். ஆனால் இங்கும் இத்தனை பிரச்சனைகளா? என்று அதிருப்தி தெரிவித்தார்.
விசாரணை முடிவில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் அறங்காவலர் நியமன விவகாரத்தில் வருகிற 18-ந்தேதி வரை எந்த முடிவும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தார்.






