என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்த பெருநகர சென்னை மாநகராட்சி
- மழைநீர் வடிகால் பராமரிப்பு நடைமுறைகள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
- முதலுதவி மற்றும் அவசரகால நடவடிக்கைகள் ஆகியவை குறித்து கலந்துரையாடல் அமர்வுகள் நடைபெற்றன.
ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்து நகர்ப்புற வெள்ள மேலாண்மை திட்டம் சென்னை–கொசஸ்தலையாறு வடிநிலைப் பகுதி திட்டத்தின் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நிறுவன வலுப்படுத்தல் மற்றும் சீர்திருத்த ஆலோசகர் (ISRC) இணைந்து, "தூய்மைப் பணியாளர்களுக்கான மழைநீர் வடிகால் பராமரிப்பு, அவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான பயிற்சி" என்ற தலைப்பில் பயிற்சி நிகழ்ச்சியை சென்னை மணலியில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலம்–II அலுவலகத்தின் கவுன்சில்ஹாலில் நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக, தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு புத்தகம் வெளியிடப்பட்டது. இதை மண்டலம்–II (மணலி) மண்டல அலுவலர் தேவேந்திரன் வெளியிட, மண்டலம்–I (திருவள்ளூர்) மண்டல அலுவலர் பத்மநாபன் பெற்றுக்கொண்டார். அனைவரும் எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் காட்சி விளக்கங்கள் கொண்ட இந்த புத்தகம், மழைநீர் வடிகால் பராமரிப்பை பாதுகாப்பாகவும் முறையான மற்றும் சுகாதாரமான முறையிலும் மேற்கொள்ள உதவும் களவழிகாட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயிற்சி அமர்வின்போது வெளியிடப்பட்ட இந்த புத்தகம், மழைநீர் வடிகால் பராமரிப்பு நடைமுறைகள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. பணியிடங்களில் ஏற்படும் பொதுவான ஆபத்துகள், பாதுகாப்பு நடைமுறைகள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) பயன்படுத்துவதின் அவசியம், முதலுதவி மற்றும் அவசர கால நடவடிக்கைகள், உடல்நல பாதிப்புகளைத் தவிர்க்க வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் இதில் விளக்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மண்டலக்குழு தலைவர் (மண்டலம்–I திருவள்ளூர்) டி. எம்.தனியரசு மற்றும் மண்டலக்குழு தலைவர் (மண்டலம்–II மணலி) ஏ.வி.ஆறுமுகம் ஆகியோர், நகர்ப்புற வெள்ளத்தடுப்பில் தூய்மைப் பணியாளர்கள் வகிக்கும் முக்கியப்பங்கை எடுத்துரைத்தனர். மழைநீர் வடிகால்களை முறையாக பராமரிப்பது, தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவது, உடல்நல பரிசோதனைகள் மேற்கொள்வது மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பது, பணியாளர்களின் நலனையும் சேவைத்தரத்தையும் உயர்த்தும் என பேசினர்.
நிகழ்ச்சியின் நோக்கங்களை விளக்கி, ISRC குழுவின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஷெரின் டேவிட் உரையாற்றினார். தூய்மைப் பணியாளர்களுக்கான தொடர்ச்சியான திறன் மேம்பாட்டு பயிற்சிகளும், இத்தகைய எளிய மற்றும் நடைமுறை சார்ந்த பயிற்சி புத்தகங்களும், செயல்பாடு மற்றும் பராமரிப்பு அமைப்புகளை வலுப்படுத்தி, சென்னை நகரின் வெள்ள அபாயத்துக்கு எதிரான தயார்நிலையை மேம்படுத்தும் என அவர் தெரிவித்தார்.
பயிற்சி நிகழ்ச்சியில், வெள்ளநீர் வடிகால் பராமரிப்பு, கழிவுகளை முறையாக அகற்றுதல், பராமரிப்பு நடவடிக்கைகள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை சரியாக பயன்படுத்துதல், பணியிடங்களில் முதலுதவி மற்றும் அவசரகால நடவடிக்கைகள் ஆகியவை குறித்து கலந்துரையாடல் அமர்வுகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியின் நிறைவாக, ISRC திறன்மேம்பாட்டு வல்லுநர் ஆபிரகாம் லிங்கன் நன்றி உரையாற்றினார். பயிற்சியில் கலந்துகொண்ட பணியாளர்களின் ஆர்வமான பங்கேற்பையும், நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த உதவிய பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கொடுத்த ஆதரவையும் அவர் பாராட்டினார்.
இந்த பயிற்சியில், சென்னை மாநகராட்சி மண்டலம்–I மற்றும் மண்டலம்–II ஆகியவற்றைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த முயற்சி, பணியாளர்களின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தி, பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்குவதோடு, மழைநீர் வடிகால் மேலாண்மையை வலுப்படுத்தி, சென்னை நகரின் நகர்ப்புற வெள்ளத்தடுப்புத் திறனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






