என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மதுரையில் அடுத்தடுத்த சம்பவம்: சரக்கு வேன்-செல்போன் கடைகளில் பயங்கர தீ விபத்து
- வாகனம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீ பற்றியுள்ளது.
- தீயானது செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களில் பரவி வெடிக்க தொடங்கிய நிலையில் தீ மளமளவென பற்றியது.
மதுரை:
மதுரை மாநகர் மாட்டுத்தாவணி அருகே மேலூர் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் ஒன்றில் பல்வேறு பொருட்களை அட்டைப் பெட்டியில் எடுத்து செல்லப்பட்டன.
இந்நிலையில் வாகனம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீ பற்றியுள்ளது. இதனால் வாகனத்தில் இருந்த பொருட்களிலும், அட்டை பெட்டிகளில் தீ மளமளவென எரிந்தது.
வாகனத்தில் இருந்த பொருட்களில் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் சில பொருட்கள் வெடிக்க தொடங்கியதால் பின்னால் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் பதறியடுத்து அச்சத்தில் அங்கும் இங்கும் ஓடினர்.
நல்வாய்ப்பாக தீ விபத்தில் இருந்து தப்பிய ஓட்டுநர் தீயணைப்புத் துறையினருக்கு அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர் தீயை தண்ணீர் பீய்ச்சியடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மதுரையில் உள்ள பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து மாட்டுத்தாவணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
ஆயுத பூஜையை முன்னிட்டு மதுரை மாநகர் மீனாட்சி பஜார் பகுதியில் உள்ள செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் கடைகளில் பூஜைகள் நடத்தப்பட்டது.
இந்நிலையில் பஜாரில் அமைந்துள்ள 184-ம் எண் கொண்ட செல்போன் விற்பனை கடையில் ஆயுத பூஜை முடிந்து விளக்கை அணைக்காமல் மாலை சென்றுள்ளனர்.
இந்நிலையில் விளக்கில் தீயானது காற்றில் பரவ தொடங்கி கடையில் தீப்பிடித்து எரிந்துள்ளது. பின்னர் தீயானது செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களில் பரவி வெடிக்க தொடங்கிய நிலையில் தீ மளமளவென பற்றியது.
மேலும் தீயானது அருகில் உள்ள அடுத்தடுத்த மூன்று கடைகளில் பரவத் தொடங்கிய நிலையில் அங்கு கூடிய பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் தீயை அணைக்க முயன்றனர்.
பின்னர் தீயணைப்புத் துறையினருக்கு அளித்த தகவலை அளித்து பெரியார் பேருந்து நிலையம் மற்றும் தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் தீயை தண்ணீர் தெளித்து அணைத்தனர். பின்னர் தீ முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த தீ விபத்தில் 4 செல்போன் கடைகளில் வைத்திருந்த பல லட்சம் மதிப்பிலான செல்போன் மற்றும் எலக்ட்ரானிக்கல் பொருட்கள் முழுவதுமாக எரிந்து சேதம் அடைந்தன.
இது குறித்து திடீர்நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் ஆயுத பூஜை கொண்டாடிவிட்டு விளக்கை அணைக்காமல் சென்றதால் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருள்கள் வீணாகி பரபரப்பை ஏற்படுத்தியது.






