என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை கோட்டத்தில் 48 மின்சார ரெயில் நிலையங்களில் டிஜிட்டல் அறிவிப்பு பலகை
- டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் ரெயிலில் வருகை மற்றும் புறப்பட நேரங்களை துல்லியமான மற்றும் உடனடித் தகவலுடன் காட்டுகின்றன.
- அனைத்து தரப்பினருக்கும் எளிதில் புரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தெற்கு ரெயில்வே சென்னை கோட்டத்தில் உள்ள புறநகர் ரெயில் நிலையங்களில் நவீன டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் அமைத்துள்ளன.
பயணிகள் வசதியை மேம்படுத்தவும் ரெயில் வருகை மற்றும் புறப்படும் நேரம் விவரங்களை உடனுக்குடன் வழங்கும் வகையில் இந்த அறிவிப்பு பலகைகள் நிறுவப்பட்டுள்ளது.
வேளச்சேரி, பழவந்தாங்கல், குரோம்பேட்டை, பல்லாவரம், திருவான்மியூர், நுங்கம்பாக்கம், வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், மீஞ்சூர், தாம்பரம், சானடோரியம், கோட்டை, திருவொற்றியூர், கொரட்டூர், சேத்துப்பட்டு, வியாசர்பாடி ஜீவா, தரமணி, திரிசூலம், அண்ணனூர், பட்டர வாக்கம், திருமயிலை, மீனம் பாக்கம், பெரம்பூர், லோகோ ஒர்க்ஸ் சேப்பாக்கம், கலங்கரை விளக்கம்.
சிந்தாதிரிப்பேட்டை, அத்திப்பட்டு, கஸ்தூரிபாய் நகர், பெருங்குடி, அனுப்பம்பட்டு, திருவல்லிக்கேணி, வண்ணாரப்பேட்டை, மந்தைவெளி, கோட்டூர்புரம், பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் கிரீன்வேஸ் சாலை, கத்திவாக்கம், இந்திரா நகர், அத்திப்பட்டு புதுநகர், முண்டக்கண்ணி அம்மன் கோவில், ராயபுரம், பேசின் பாலம், பொன்னேரி, விம்கோ நகர், ஊரப்பாக்கம், மறைமலைநகர் மற்றும் நந்தியம்பாக்கம் ஆகிய 48 ரெயில் நிலையங்களில் இந்த வசதி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் ரெயிலில் வருகை மற்றும் புறப்பட நேரங்களை துல்லியமான மற்றும் உடனடித் தகவலுடன் காட்டுகின்றன. மேலும் ரெயில் எண்கள் இலக்கு நிலையங்கள் பிளாட்பாரம் விவரங்கள் மற்றும் தற்போதைய நிலை ஆகியவை தெளிவாக காட்டப்படுகிறது. அனைத்து தரப்பினருக்கும் எளிதில் புரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எல்.இ.டி. திரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அதிக நெரிசல் நேரங்களிலும் மற்றும் பல்வேறு வெளிச்ச நிலைகளிலும் கூட இந்த பலகைகள் தெளிவாக காணப்படுகின்றன. இந்த முயற்சி தினசரி பயணிகள், முதியவர்கள் மற்றும் முதன்முறையாக பயணம் செய்பவர்கள் ஆகியோருக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.






