என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இங்கிலாந்து, ஜெர்மனி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்றார்.
- கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஸ்பெயின் நாட்டுக்கு சென்று ரூ.3 ஆயிரத்து 440 கோடிக்கு தொழில் ஒப்பந்தங்கள் மேற்கொண்டார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை 1 டிரில்லியன் டாலர் என்ற அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற இலக்குடன் தொழில் மேம்பாட்டு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.
அதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நாடுகளின் முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு பெற்று வருகிறார். இதுவரை அவர் 4 தடவை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு உள்ளார்.
2021-ம் ஆண்டு முதலமைச்சர் பொறுப்பை ஏற்றப் பிறகு முதல் முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்றார். அங்கு ரூ.6 ஆயிரத்து 100 கோடி அளவுக்கு தொழில் ஒப்பந்தங்கள் செய்து வந்தார். இதன் மூலம் தமிழகத்தில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
பிறகு 2023-ம் ஆண்டு சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்று ரூ.1,342 கோடி ஒப்பந்தங்கள் செய்தார். இது சுமார் 2 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தரும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஸ்பெயின் நாட்டுக்கு சென்று ரூ.3 ஆயிரத்து 440 கோடிக்கு தொழில் ஒப்பந்தங்கள் மேற்கொண்டார்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் அமெரிக்காவுக்கு சென்று ரூ.7 ஆயிரத்து 616 கோடிக்கு பல்வேறு தொழில் மேம்பாட்டு ஒப்பந்தங்கள் செய்து வந்தார். இது 11 ஆயிரத்து 516 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் சூழலை கொடுத்திருக்கிறது.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக 5-வது முறையாக வெளிநாடு செல்ல திட்டமிட்டு உள்ளார். இந்த தடவை அவர், இங்கிலாந்து, ஜெர்மனி நாடுகளுக்கு செல்ல இருக்கிறார்.
அநேகமாக இந்த மாத இறுதியில் அவர் வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்வார் என்று தெரிய வந்துள்ளது. இல்லையெனில் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் அவரது பயணம் இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்த இரு நாடுகளிலும் பல்வேறு தொழில் அதிபர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச இருக்கிறார். அப்போது தமிழகத்திற்கு தொழில் தொடங்க வருமாறு, அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுக்கிறார்.
இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் போது லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாணவர்கள் மத்தியில் உரையாற்ற இருக்கிறார். இன்னும் சிறிது நாட்களில் முதலமைச்சரின் முழுமையான பயணத் திட்டம் தெரியவரும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்து, ஜெர்மனி இரு நாடுகளிலும் சுமார் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் பயணம் மேற்கொள்வார் என்று தெரிகிறது. தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில் முதலமைச்சரின் தொழில் முதலீடு ஈர்ப்பு பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.






