என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மதுரையில் ரூ.1,805.78 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
    X

    மதுரையில் ரூ.1,805.78 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

    • ரூ.3.50 கோடி செலவில் அமைக்கப்பட்டிருந்த அங்கூரான் நவீன அறிவியல் மையத்தையும் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    • மருது சகோதரர்களின் சிலைகளை காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    மதுரை:

    மதுரையில் பல்வேறு அரசு விழாக்கள், தி.மு.க. தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் பங்கேற்க இன்று காலை விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு விமான நிலையத்திலிருந்து வடபழஞ்சியில் உள்ள எல்காட் தொழில்நுட்ப பூங்காவிற்கு மு.க.ஸ்டாலின் காரில் வந்தார்.

    அங்கு சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்காட் வளாகத்தில் பினாகிள் இன்போடெக் நிறுவனத்தின் விரிவுப்படுத்தப்பட்ட புதிய உலகளாவிய சிறப்புப் பொறியியல் மையக்கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும் புதிய கட்டிடத்திற்கும் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து எச்.சி.எல். நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. மேலும் அங்கு ரூ.3.50 கோடி செலவில் அமைக்கப்பட்டிருந்த அங்கூரான் நவீன அறிவியல் மையத்தையும் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    பின்னர் மதுரை தமுக்கத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரையில் ரூ.213.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலத்தை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்பணித்தார். இதே நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்டம் சூரக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மருது சகோதரர்களின் சிலைகளை காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    தொடர்ந்து மதுரை அரசு மீனாட்சி கல்லூரிக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள எச்.பி. கணினி திறன் மேம்பாட்டு மையத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் ரூ.50 கோடி செலவில் மறு சீரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்ட வண்டியூர் பூங்காவை முதலமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார். இங்கு நடந்த விழாவில் ரூ.1.67 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகக் கட்டிடம் மற்றும் ரூ.1536.31 கோடி செலவிலான 867 ஊரகக் குடியிருப்புகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தையும் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இதில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார், மாநகராட்சி கமிஷனர் சித்ராவிஜயன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×