என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

21 மாவட்டங்களில் 400 வகுப்பறை கட்டிடங்கள்- முதலமைச்சர் திறந்து வைத்தார்
- 21 மாவட்டங்களிலுள்ள 195 பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 400 வகுப்பறைக் கட்டிடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 95 வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 171 பள்ளிகளில் 56.11 கோடி ரூபாய் செலவில் 350 புதிய மற்றும் கூடுதல் வகுப்பறைகள்;
அரசுப் பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் ஒட்டுமொத்த தூய்மைக்கு புத்துயிர் அளித்தல் திட்டத்தின் கீழ், தருமபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவாரூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 24 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 8.33 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 50 புதிய மற்றும் கூடுதல் வகுப்பறைகள் என மொத்தம் 21 மாவட்டங்களிலுள்ள 195 பள்ளிகளில் ரூ.64.44 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 400 வகுப்பறைக் கட்டிடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும் 6 மாவட்டங்களில் 35 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 9 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள் என மொத்தம் 99 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவிலான கட்டிடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 8 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பிலான 95 வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.






