கீரிப்பிள்ளை கடித்ததில் 7 வயது சிறுவன் உயிரிழப்பு

எதிர்பாராத விதமாக சிறுவன் நவீனின் கையை கடித்துள்ளது.உடனடியாக பெற்றோர்கள் நவீனை அப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று முதலுதவி அளித்தனர்.
கீரிப்பிள்ளை கடித்ததில் 7 வயது சிறுவன் உயிரிழப்பு
Published on

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் புதுத்தெருவை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி தேவி. இவர்களது மகன் நவீன் (வயது 7). அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். முத்து தனது வீட்டில் கோழிகள் வளர்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் நவீன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது கோழியை பிடிப்பதற்காக கீரிப்பிள்ளை வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் நவீனின் கையை கடித்துள்ளது. இதனால் வலி தாங்காமல் சிறுவன் கதறி துடித்துள்ளார்.

உடனடியாக பெற்றோர்கள் நவீனை அப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று முதலுதவி அளித்தனர். ஆனால், தொடர் சிகிச்சை பெறவில்லை. இந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு நவீனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சிறுவனை சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நவீன் காய்ச்சல் அதிகமாகி கீரிப்பிள்ளை போல் செய்கை செய்து உயிரிழந்தார். கீரிப்பிள்ளை கடித்து உரிய சிகிச்சை எடுக்காமல் இருந்த நிலையில், 3 மாதம் கழித்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com