என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

25 காரைக்கால் மீனவர்கள் கைது- இலங்கை கடற்படை அட்டூழியம்
- எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
- 2 விசைப்படகுடன் இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது.
ராமேசுவரம்:
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று மீன்வளத்துறையிடம் அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு புறப்பட்டனர். இதில் கீழகாசாகுடி மேடு பகுதியை சேர்ந்த பிரதாப், கிளிஞ்சல் மேடு ஜெகன் ஆகியோருக்கு சொந்தமான படகில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 25 மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இன்று அதிகாலை பாக்ஜலசந்தி அருகே இந்திய எல்லையை ஒட்டியுள்ள நெடுந்தீவு பகுதியில் காரைக்கால் மீனவர்கள் வலைகளை விரித்து மீன்பிடி பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களிடம் சர்வதேச கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதியில்லை.
எனவே இங்கிருந்து உடனடியாக செல்லுங்கள் என எச்சரித்தனர். இதையடுத்து அங்கு மீன்பிடித்து கொண்டிருந்தவர்கள் அவசர அவசரமாக கரைக்கு புறப்பட்டனர். அப்போது பிரதாப், ஜெகன் ஆகியோரது படகுகளில் வந்து மீன்பிடித்த 25 மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி அவர்களை2 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைப்படித்தனர்.
பின்னர் 25 பேரும் இலங்கை காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து அவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இன்று பிற்பகல் கைதான மீனவர்கள் 25 பேரும் யாழ்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
எல்லை தாண்டி வந்ததாக கூறி காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 25 பேர் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மீனவர்களிடயே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.






