என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சிவகாசி அருகே வீட்டின் கேட் - சுவர் இடிந்து விழுந்து சிறுமிகள் பலி
    X

    சிவகாசி அருகே வீட்டின் கேட் - சுவர் இடிந்து விழுந்து சிறுமிகள் பலி

    • கொங்கலாபுரத்தில் ராஜாமணி என்பவரது வீட்டின் கேட்டில் 2 சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
    • கமலிகா, ரிஷிகா கேட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது கேட் விழுந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொங்கலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர் போலீசாக பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு 9 வயதில் கமலிகா என்ற மகள் இருந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை ராஜேஸ்வரி வீட்டின் வாசலில் கமலிகா மற்றும் உறவினர் ரமேஷ் என்பவரின் 4 வயது மகள் ரிஷிகா ஆகியோர் விளையாடி கொண்டிருந்தனர்.

    2 பேரும் வீட்டின் கேட்டை பிடித்து விளையாடினர். திடீரென கேட் பெயர்ந்து விழுந்தது. அதே வீட்டின் சுற்றுச்சுவரும் இடிந்து கமலிகா, ரிஷிகா மீது விழுந்தது. உடனே அங்கிருந்தவர்கள் பதறியடித்து கொண்டு இடிபாடுகளில் சிக்கி இருந்த 2 சிறுமிகளையும் மீட்டனர்.

    ஆனால் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். சிறுமிகளின் உடல்களை பார்த்து அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமிகளின் உடல்களை கைப்பற்றி சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    விளையாடி கொண்டிருந்த 2 சிறுமிகள் பலியான துயர சம்பவம் கொங்கலாபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×