என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விசாரணைக்கு சென்றபோது போலீஸ்காரர்களை வெட்டி கொல்ல முயன்ற வாலிபர்கள்- பெரியகுளத்தில் பரபரப்பு
- பொதுமக்கள் அரிவாளை பறித்து அங்கிருந்த போலீசாரை செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.
- காமராஜ் தப்பி ஓடிய நிலையில் தீபக் ரவிச்சந்திரன் என்பவரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு தென்கரை பட்டாளம்மன் கோவில் அருகே உள்ள காலனி பகுதியைச் சேர்ந்த பிரபாகர் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தீபக் ரவிச்சந்திரன் மற்றும் அவரது நண்பரான காமராஜ் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் மதுபோதையில் தீபக் ரவிச்சந்திரன் மற்றும் அவரது நண்பரான காமராஜ் ஆகியோர் கஞ்சா மற்றும் மதுபோதையில் அரிவாள், கத்தியுடன் பிரபாகரனின் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தைகளை கூறி உன்னை வெட்டாமல் விடமாட்டேன் என்று கூறி சத்தம் போட்டுள்ளனர்.
அப்பொழுது பிரபாகரன் வீட்டில் இல்லாத நிலையில் அவரது தங்கை ஹேமலதா வெளியே வந்தார். அவரை கத்தியால் அவரது உடையை கிழித்து வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கினர். இதனையடுத்து ஹேமலதா போலீசில் புகார் அளித்தார். உடனடியாக ஹேமலதா மற்றும் அவரது தாயை அழைத்துக்கொண்டு பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளார்.
இந்த தகவல் அறிந்ததும் பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்திலிருந்து செந்தமிழன் மற்றும் தினேஷ் என்ற இரு போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விசாரணைக்கு சென்றனர். அப்போது தகராறில் ஈடுபட்ட தீபக் ரவிச்சந்திரன் மற்றும் காமராஜ் ஆகியோர் இடுப்பில் 2 டின் பீர்களை வைத்துக்கொண்டு விசாரணைக்கு சென்ற போலீசாரை யாரிடம் அனுமதி கேட்டு எங்களது தெரு பகுதிக்குள் உள்ளே வந்தீர்கள் என அவர்களின் சட்டையை பிடித்து கேட்டதோடு, உங்கள் மீதே வழக்கு தொடுப்பேன் என மிரட்டி உள்ளனர்.
இதனையடுத்து போலீசார் அவர்கள் மிரட்டுவதை செல்போனில் வீடியோ எடுக்க தொடங்கினர். அப்போது மதுபோதையில் போலீசாரிடம் தொடர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒரு கட்டத்தில் காமராஜ் என்பவர் அவரது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த அரிவாளை எடுத்து விசாரணைக்கு சென்ற போலீசாரை ஓங்கி வெட்டினால் தலை துண்டாக போய்விடும் என கூறிக்கொண்டே அவர்களை வெட்ட முயன்றார்.
இதனை அடுத்து அங்கு இருந்த பொதுமக்கள் அரிவாளை பறித்து அங்கிருந்த போலீசாரை செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து தென்கரை இன்ஸ்பெக்டர் ஜோதி பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு அங்கு போலீசாரை தகாத வார்த்தையில் திட்டியும், அரிவாளால் வெட்ட வந்தவர்களை தேடினர். காமராஜ் தப்பி ஓடிய நிலையில் தீபக் ரவிச்சந்திரன் என்பவரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தலைமறைவாக உள்ள வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






