

தருமபுரி:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் மல்லாபுரம் அடுத்த செங்கானூரைச் சேர்ந்த சாம்ராஜ் (23) என்பவர், அதே ஊரைச் சேர்ந்த உறவினர் மகள் சத்யா (23) என்பவரை திருமணம் செய்ய விருப்பப்பட்டு பெண் கேட்டுள்ளார். ஆனால், சத்யாவுக்கு அவரது குடும்பத்தார் வேறு இடத்தில் திருமண ஏற்பாடு செய்துள்ளனர்.
இதையறிந்த சாம்ராஜ் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந்தேதி தருமபுரி புறநகர் பஸ் நிலையத்தில் சத்யாவை சந்தித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். அப்போது சத்யா மறுத்ததால், திடீரென சத்யாவை வெட்டிக்கொலை செய்தார். இது தொடர்பாக தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளியை கைது செய்தனர்.
இந்த வழக்கு தருமபுரி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் கல்பனா ஆஜராகி வாதாடி வந்தார். தொடர்ந்து வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில் சாம்ராஜ், சத்யாவை வெட்டிக்கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து குற்றவாளி சாம்ராஜூக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தருமபுரி மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.