என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நெல்லை அரசு மருத்துவமனையில் பணியாற்றிய நர்சை உயிரோடு எரித்துக் கொன்றது ஏன்? போலீசார் தீவிர விசாரணை
- கொலை செய்யப்பட்ட அய்யம்மாளுக்கு வில்டன் இப்ராகிம், சிவராஜ், சிப்ரல் ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
- கடந்த சில ஆண்டுகளாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மனைவி அய்யம்மாள் (வயது 45). இவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார்.
நேற்று இரவு பணி முடிந்து அவர் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்தார். அண்ணாநகர் சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த அவரது கணவர் அவரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நர்சை குத்திவிட்டு மண்எண்ணையை தலையில் ஊற்றி தீ வைத்து விட்டு பாலசுப்பிரமணியன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதில் அவர் உயிரிழந்தார்.
இது குறித்து ஐகிரவுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை தேடிவந்த நிலையில், அவர் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து அவரை ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
கொலை செய்யப்பட்ட அய்யம்மாளுக்கு வில்டன் இப்ராகிம், சிவராஜ், சிப்ரல் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். பாலசுப்பிரமணியன் குடும்பத்துடன் முஸ்லிம் மதத்துக்கு மாறி உள்ளார். அவர் தனது பெயரை அக்பர் இப்ராகிம் என்று மாற்றி உள்ளார். இவருக்கு அவ்வப்போது மனநிலை பாதிக்கப்பட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
தொடர்ந்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்ததால் கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் அய்யம்மாள் தனது மகன்களுடன் அண்ணாநகரில் வீடு வாடகைக்கு எடுத்து குடியேறி உள்ளார். நேற்று அய்யம்மாள் வழக்கம் போல் பணிக்கு சென்றிவிட்டு திரும்பிய போது இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து விசாரித்தபோது, அவர் சைத்தான் தான் என்னை கொலை செய்ய சொல்லியது என்று மட்டும் கூறி வருகிறார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.






