என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பலத்த மழை இல்லாததால் சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்தது
- சோழவரம், பூண்டி, புழல் ஏரிகளுக்கும் நீர்வரத்து சரிந்து உள்ளது.
- கோடை வெப்பம் அதிக அளவில் இருந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்த மழையில் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
பூந்தமல்லி:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து இருந்தது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேற்று 1649 கனஅடி வரை தண்ணீர் வந்தது. இந்த நிலையில் நேற்று பலத்த மழை இல்லாததால் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து தற்போது குறைந்து உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்றைய காலை நிலவரப்படி நீர் வரத்து 545 கனஅடியாக குறைந்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் தற்போது 19.83 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் 2562 மில்லியன் கன தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் சோழவரம், பூண்டி, புழல் ஏரிகளுக்கும் நீர்வரத்து சரிந்து உள்ளது.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி. இதில் 2239 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 781 கனஅடி தண்ணீர் வந்த நிலையில் இது 328 கனஅடியாக குறைந்து இருக்கிறது.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி.கனஅடி. இதில் 403 மி.கனஅடி நீர் உள்ளது. ஏரிக்கு 115 கனஅடி தண்ணீர் வந்த நிலையில் இது 36 கனஅடியாக குறைந்து விட்டது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 1320 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 670 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 421 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து இல்லை.
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள ஓரிக்கை, செவிலி மேடு, பேருந்து நிலையம், சுங்குவார் சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. கோடை வெப்பம் அதிக அளவில் இருந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்த மழையில் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.






