search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    68 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்: 5 மாவட்ட மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
    X

    68 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்: 5 மாவட்ட மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
    • கனமழை காரணமாக கும்பக்கரை, சுருளி அருவி, கொட்டக்குடி ஆறு, மேகமலை அருவி ஆகிய பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் முல்லைப்பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியதால் அந்த அணைகளில் இருந்து வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக துணை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக கொட்டக்குடி, வராக நதி, சுருளியாறு, வரட்டாறு, மஞ்சளாறு போன்றவற்றில் ஏற்பட்டுள்ள நீர் பெருக்கு வைகை ஆற்றுக்கு தண்ணீர் வரத்தை அதிகரித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 68.08 அடியாக உள்ளது. ஏற்கனவே முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் தற்போது மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து 2310 கன அடியாக உள்ளது. தற்போது மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5338 மி.கன அடியாக உள்ளது. இன்று மாலை அல்லது நாளை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால் தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    சதுரகிரி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே யானை கஜம் அருவியில் தண்ணீர் அதிக அளவு செல்கிறது.

    அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியதும் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் மதகுகள் வழியாக வெளியேற்றப்படும். இதனால் கரையோரமுள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே வைகை அணையில் இருந்து வருகிற 10-ந் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் தற்போது உள்ள நிலவரப்படி அதற்கு முன்பாகவே தண்ணீர் திறக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதே போல முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 125.85 அடியாக இருந்த நீர்வரத்து இன்று ஒரே அடி உயர்ந்து 126.85 அடியாக அதிகரித்துள்ளது. நேற்று 980 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று 2605 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 105 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4018 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணை நீர்மட்டம் 51.50 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.87 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 412 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

    கனமழை காரணமாக கும்பக்கரை, சுருளி அருவி, கொட்டக்குடி ஆறு, மேகமலை அருவி ஆகிய பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல இன்று 5-ம் நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பெரியாறு 35.2, தேக்கடி 46, கூடலூர் 21.2, உத்தமபாளையம் 50.4, சண்முகாநதி அணை 16, போடி 21.3, மஞ்சளாறு 10.4, சோத்துப்பாறை 52, வைகை அணை 23.4, பெரியகுளம் 14, வீரபாண்டி 21.8, அரண்மனைப்புதூர் 12.2, ஆண்டிபட்டி 61.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    Next Story
    ×