search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக கோர்ட்டுகளில் காலியான 2,329 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
    X

    தமிழக கோர்ட்டுகளில் காலியான 2,329 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

    • விண்ணப்பதாரர்கள் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பின்பு, மற்றொரு மாவட்டத்தில் நடைபெறும் தேர்வில் பங்கேற்பதற்கு மாற்றம் செய்ய முடியாது.
    • பணியிடங்கள் முற்றிலும் தகுதியின் அடிப்படையிலேயே நடத்தப்படும்.


    சென்னை:

    தமிழகத்தில் உள்ள மாவட்ட கோர்ட்டுகளில் காலியாக இருக்கும் 2 ஆயிரத்து 329 காலி பணியிடங்களை நிரப்புதற்கான அறிவிப்பு ஐகோர்ட்டு மூலம் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணியிடங்களுக்கு https://www.mhc.tn.gov.in என்ற ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த இணையதளத்தில் மாவட்ட வாரியாக நிரப்பப்பட உள்ள பணியிடங்கள் விவரம் மற்றும் எண்ணிக்கை, கல்வித்தகுதிகள், முன்னுரிமைகள் பற்றி விரிவாக கூறப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு தனித்தனி அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன.

    எனவே விண்ணப்பதாரர்கள் தங்களது விருப்பப்படி ஏதாவது ஒரு மாவட்டத்தில் தங்களுக்கு ஏற்ற பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஏனென்றால் அனைத்து மாவட்டங்களில் உள்ள ஒரே விதமான பதவிக்கான பொது எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வு ஆகியவை அந்தந்த மாவட்டங்கள் அல்லது வேறு இடங்களில் ஒரே நாளில் நடைபெறும்.

    எனவே விண்ணப்பதாரர்கள் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பின்பு, மற்றொரு மாவட்டத்தில் நடைபெறும் தேர்வில் பங்கேற்பதற்கு மாற்றம் செய்ய முடியாது. அதே போல் தேர்வு செய்யப்படுவர்கள் விண்ணப்பித்த மாவட்டத்திலேயே தங்கி பணி செய்ய வேண்டும். எனவே விண்ணப்பதாரர்கள் மிக கவனமாக மாவட்டங்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த பணியிடங்கள் குறித்து சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் (நீதித்துறை) செல்வநாதன் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு நேரடியாக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கான விரிவான அறிவிப்பு, விண்ணப்பத்தாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள், இணையதளத்தில் பதிவு செய்யும் முறை மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு சென்னை ஐகோர்ட்டின் ஆட்சேர்ப்பு இணையதளமான https://www.mhc.tn.gov.in பார்த்து கொள்ளலாம்.

    இந்த பணியிடங்கள் மற்றும் காலி இடங்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு:-

    நகல் பரிசோதகர் -60 பணியிடங்கள், நகல் வாசிப்பாளர் - 11, முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் - 100, இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் - 242, கட்டளை எழுத்தர் - 1, ஒளிப்பட நகல் எடுப்பவர் - 53, டிரைவர்கள் - 27, நகல் பிரிவு உதவியாளர் - 16, அலுவலக உதவியாளர் - 638, தூய்மை பணியாளர் - 202, தோட்ட பணியாளர் - 12, காவலர் - 459, இரவு காவலர் மற்றும் மசால்ஜி - 85, காவலர் மற்றும் மசால்ஜி - 18, தூய்மை பணியாளர் மற்றும் மசால்ஜி- 1, வாட்டர் ஆண் - வாட்டர் பெண் - 2, மசால்ஜி - 402 ஆகும்.

    இந்த பணியிடங்கள் முற்றிலும் தகுதியின் அடிப்படையிலேயே நடத்தப்படும். நேர்மையற்ற முறையில் வேலை வாங்கித்தருவதாக பொய்யான வாக்குறுதி அளித்து ஏமாற்றும் மோசடியாளர்கள் மற்றும் தரகர்களிடம் இருந்து விண்ணப்பதாரர்கள் தங்களை காத்துக்கொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் (மே) 27-ந் தேதி கடைசி நாளாகும். தேர்வு கட்டணத்தை (மே) 29-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×