என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வீராணம் ஏரிக்கு காவிரி நீர் வந்தடைந்த காட்சி.
காவிரி நீர் வீராணம் ஏரியை வந்தடைந்தது- சென்னைக்கு கூடுதல் குடிநீர் அனுப்பி வைப்பு
- கடந்த ஆண்டு வீராணம் ஏரி 7 முறை நிரம்பியது.
- இந்த ஆண்டு கடந்த 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அது கீழணையில் தேக்கப்பட்டு வந்தது.
காட்டுமன்னார் கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் வீராணம் ஏரி உள்ளது. கொள்ளிடம் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வருகிறது.
இந்த ஏரியின் மொத்த கொள்ளவு 47.5 அடியாகும். ஏரி மூலம் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இங்கிருந்து சென்னைக்கு புதிய வீராணம் திட்டத்தில் குடிநீர் அனுப்பப்படுகிறது.
கடந்த ஆண்டு வீராணம் ஏரி 7 முறை நிரம்பியது. இந்த ஆண்டு கடந்த 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அது கீழணையில் தேக்கப்பட்டு வந்தது.
கீழணையின் மொத்த கொள்ளளவான 9 அடியில் 4 அடி தேக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு கடந்த 24-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் வீராணம் ஏரியை வந்தடைந்தது.
வினாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் ஏரியில் தற்போது 94 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.
இதனால் சென்னைக்கு கூடுதலாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சென்னைக்கு குடிநீருக்காக வினாடிக்கு 56 கன அடி வீதம் அனுப்பப்பட்டு வருகிறது.






