என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'முதலில் வருவோருக்கு முதலில் சேவை' நடைமுறை விரைவில் அறிமுகம்- தமிழக அரசு அறிவிப்பு
- தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் இணைய வழியில் 81.76 லட்சம் பட்டா மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
- 2 வகையான விண்ணப்பங்களுக்கும் ஒரே வரிசை எண் வழங்கப்படுகிறது என்ற தகவல் தவறானது.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உட்பிரிவுடன் கூடிய பட்டா மாற்றம், உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா மாற்றம் ஆகிய விண்ணப்பங்களுக்கு தனித்தனியே வரிசை எண் வழங்கப்பட்டு அவற்றின் மீது உரிய கால அளவில் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் இணைய வழியில் 81.76 லட்சம் பட்டா மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு இந்த சேவைகளை கூடுதலான வெளிப்படைத்தன்மையுடன் விரைந்து வழங்க ஏதுவாக விண்ணப்பங்களைப் பெற்ற வரிசைப்படி தீர்வு செய்யும் நடைமுறை 4.6.2024 முதல் உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா மாற்றம் கோரும் விண்ணப்பங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா மாற்றம் கோரும் விண்ணப்பங்களில் 'முதலில் வருவோருக்கு முதலில் சேவை' என்ற நடைமுறையில் 4.6.2024 முதல் 16.6.2024 வரை 15 ஆயிரத்து 484 பட்டா மாற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், உட்பிரிவுடன் கூடிய பட்டா மாற்ற விண்ணப்பங்களில் 'முதலில் வருவோருக்கு முதலில் சேவை' என்ற நடைமுறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.
2 வகையான விண்ணப்பங்களுக்கும் ஒரே வரிசை எண் வழங்கப்படுகிறது என்ற தகவல் தவறானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






