search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கள்ளக்காதல் தகராறில் பெயிண்டர் வெட்டி கொலை- மனைவியின் காதலன் வெறிச்செயல்
    X

    கள்ளக்காதல் தகராறில் பெயிண்டர் வெட்டி கொலை- மனைவியின் காதலன் வெறிச்செயல்

    • போலீசார் சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • பெயிண்டரை மனைவியின் கள்ளக்காதலன் வெட்டி கொலை செய்த சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவெறும்பூர்:

    திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கீழ குமரேசபுரம் மாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 48). பெயிண்டர்.

    இவருக்கு சமுத்திரவள்ளி (45) என்ற மனைவியும் ஆஷா சர்மிலி, சுவாதி, ஹரிணி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.ஆஷா சர்மிலி சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியிலும், சுவாதி சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாகவும் வேலை பார்த்து வருகிறார்கள். ஹரிணி திருவெறும்பூரில் ஐடிஐ படித்து வருகிறார்.

    சரவணனின் மனைவி சவுந்தரவள்ளி எழில் நகர் பகுதியில் ஒரு பந்தல் காண்ட்ராக்டரிடம் வேலை பார்த்து வருகிறார்.

    இதில் மேலாளராக வேலை பார்க்கும் லால்குடியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (55) என்பவருடன் சவுந்தரவள்ளிக்கு பழக்கம் ஏற்பட்டது.

    பின்னர் அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

    இதை அறிந்த சரவணன், மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை கண்டித்தார். இதனால் ராதாகிருஷ்ணனுக்கு சரவணன் மீது தீராத ஆத்திரம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவு ராதாகிருஷ்ணன் கள்ளக்காதலி வீட்டிற்கு சென்றார். அப்போது சவுந்திரவள்ளி தனது மகள்களை பார்ப்பதற்காக சென்னைக்கு சென்றிருந்தார். அங்கு தனியாக சரவணன் இருந்துள்ளார். பின்னர் அங்கிருந்த சரவணனிடம் பேச்சுக்கொடுத்து, அவரை மது குடிக்க வைத்தார். அப்போது சரவணன், ராதாகிருஷ்ணனிடம் தனது மனைவியுடனான உறவை துண்டித்து விடுமாறு கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன், பெயிண்டர் சரவணனை சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    பின்னர் ராதாகிருஷ்ணன் சென்னைக்கு சென்றிருந்த கள்ளக்காதலி சவுந்தரவள்ளிக்கு போன் செய்து சரவணனை வெட்டி கொன்று விட்டதாக கூறியுள்ளார்.அதிர்ச்சியடைந்த சவுந்திரவள்ளி உடனடியாக தான் வேலை பார்க்கும் பந்தல் காண்ட்ராக்டர் பால்ராஜ் என்பவருக்கு தகவல் சொல்லி வீட்டிற்கு சென்று பார்க்கும்படி கூறியுள்ளார்.

    உடனடியாக பால்ராஜ், சரவணன் வீட்டிற்கு சென்றார். அங்கு சரவணன் ரத்த வெள்ளத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் போலீசார் சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மது போதையில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டரை மனைவியின் கள்ளக்காதலன் வெட்டி கொலை செய்த சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×