search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நாளை முதல் 4 நாட்கள் சிறப்பு பஸ்கள்
    X

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நாளை முதல் 4 நாட்கள் சிறப்பு பஸ்கள்

    • கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காகவும் 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பஸ் இயக்கத்தை முறைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் வார இறுதி நாட்களில் எப்போதும் பஸ்களில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    சனி, ஞாயிறு என தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை என்பதால் பஸ்களில் பலர் வெளியூர் சென்று வருகின்றனர். மேலும் உறவினர் வீடுகளுக்கு செல்வது, சொந்த ஊர்களுக்கு செல்வது போன்றவை வார இறுதி நாட்களில் தான்.

    இதனால் அந்த நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றது.

    அதன் அடிப்படையிலும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காகவும் 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்ட மேலாண்மை இயக்குனர் மோகன் தெரிவித்தார்.

    இது பற்றி அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் வார விடுமுறை நாட்களையொட்டி பொதுமக்களின் வசதிக்காக நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 10-ந்தேதி (திங்கட்கிழமை) வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கும் 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதைப்போல திருச்சியிலிருந்து கோவை, திருப்பூர், மதுரை ஆகிய ஊர்களுக்கும், கோவை, திருப்பூர், மதுரை ஆகிய ஊர்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கும் 100 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 300 சிறப்பு பஸ்கள் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) இயக்கப்படுகின்றன.

    இதேபோன்று மேற்படி விடுமுறைக்கு வந்த பயணிகள் திரும்ப அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 10-ந் தேதி (திங்கட்கிழமை) ஆகிய நாட்களில் சென்னை தடத்தில் 200 சிறப்பு பஸ்களும், மற்ற தடங்களில் 100 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.

    இதனை முன்னிட்டு முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பஸ் இயக்கத்தை முறைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×