search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார்? சிவ்தாஸ் மீனாவுக்கு வாய்ப்பு அதிகம்
    X

    தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார்? சிவ்தாஸ் மீனாவுக்கு வாய்ப்பு அதிகம்

    • தலைமைச் செயலாளர் இறையன்பு ஓய்வு பெற்றவுடன், தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
    • சைலேந்திரபாபு டி.என்.பி.எஸ்.சி. தலைவராகலாம் என தெரிகிறது.

    சென்னை:

    தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு வருகிற 30-ந்தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதே நாளில் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவும் ஓய்வு பெறுகிறார்.

    இந்நிலையில் தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலர் யார்? புதிய டி.ஜி.பி. யார்? என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    சென்னை போலீஸ் கமிஷனராக உள்ள சங்கர் ஜிவால் புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கப்படுவார் என தெரிகிறது.

    ஆனாலும் இந்த பட்டியலில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பெயர்கள் உள்ளதால் அதில் ஒருவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்து அறிவிப்பார்.

    அதே போல் புதிய தலைமைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

    அதாவது தற்போதைய தமிழக அரசின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பட்டியலில் முதலிடத்தில் 1986-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஹன்ஸ்ராஜ் வர்மா. இவர் தற்போது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழக தலைவராக உள்ளார்.

    அடுத்தது, 1989ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான எஸ்.கே.பிரபாகர். இவர் தற்போது வருவாய்த் துறையின் கீழ் வரும் வருவாய் நிர்வாக ஆணையராக உள்ளார்.

    மூன்றாவது, இதே 1989-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவ்தாஸ் மீனா. இவர் தற்போது நகராட்சி நிர்வாகத்துறை செயலராக உள்ளார்.

    இவர்களில் பெரும்பாலும் சிவ்தாஸ் மீனாவே தமிழக அரசின் அடுத்த தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தலைமைச் செயலாளர் இறையன்பு ஓய்வு பெற்றவுடன், தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதே போல் சைலேந்திரபாபு டி.என்.பி.எஸ்.சி. தலைவராகலாம் என தெரிகிறது.

    Next Story
    ×