என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஊட்டியில் தங்கும் விடுதி அறைக்காக ஆன்லைனில் முன்பதிவு செய்யும் சுற்றுலா பயணிகளிடம் மோசடி
    X

    ஊட்டியில் தங்கும் விடுதி அறைக்காக ஆன்லைனில் முன்பதிவு செய்யும் சுற்றுலா பயணிகளிடம் மோசடி

    • அறை முன்பதிவு செய்து வங்கி கணக்கு எண் மூலமாக சுற்றுலா பயணிகள் பணம் செலுத்துகின்றனர்.
    • ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறிப்பிட்ட ஓட்டலுக்கு செல்லும்போது மோசடி சம்பவம் நடந்திருப்பது தெரியவருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனின்போது, சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். அவர்களை மகிழ்விப்பதற்காக கோடை விழா நடத்தப்படுகிறது.

    இதையொட்டி தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தங்கும் விடுதிகளில் அறை முன்பதிவு செய்கின்றனர். இவ்வாறு ஆன்லைனில் பணம் செலுத்தி அறை முன்பதிவு செய்யும் சுற்றுலா பயணிகளிடம் பணம் மோசடி செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.

    இதுகுறித்து ஊட்டி சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

    ஊட்டியில் தங்கும் விடுதிகள் மற்றும் காட்டேஜ்களில் அறை முன்பதிவு செய்வார்கள் என்பதை தெரிந்துகொண்ட மோசடி பேர்வழிகள், இங்கு ஏற்கனவே உள்ள ஓட்டல்கள் அல்லது ஓட்டல்களே இல்லாமல் ஏதாவது ஒரு பெயரில் ஓட்டல்கள் இருப்பது போல ஆன்லைனில் விவரங்களை பதிவேற்றம் செய்வார்கள்.

    மேலும், சர்ச் என்ஜின் ஆப்டிமைசேஷன் என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஊட்டியில் அறை உள்ளதா என்று கூகுளில் யாராவது தேடினால், இவர்கள் போலியாக உருவாக்கிய முகவரி, வங்கி கணக்கு எண் விவரங்கள் முதலில் வரும்படி செய்துவிடுகின்றனர்.

    இதைத்தொடர்ந்து அறை முன்பதிவு செய்து வங்கி கணக்கு எண் மூலமாக சுற்றுலா பயணிகள் பணம் செலுத்துகின்றனர். அதன் பின், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறிப்பிட்ட ஓட்டலுக்கு செல்லும்போது மோசடி சம்பவம் நடந்திருப்பது தெரியவருகிறது. இதேபோல் பலரும் பாதிக்கப்பட்டிருக்கலாம். புகார் அளித்தால்தான் முழு உண்மை நிலவரம் தெரியவரும். இதுவரை சுமார் 10 ஓட்டல் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை பணம் ஏமாற்றப்பட்டுள்ளது.

    இதுகுறித்து வலைதள நிறுவனத்துக்கு புகார் அளித்து, அந்த போலி இணையதள முகவரியை நீக்கம் செய்ய அறிவுறுத்தி கடிதம் அளித்துள்ளோம். அதேபோல, இணையதளம் மூலமாக பணம் செலுத்தி அறை முன்பதிவு செய்யும் சுற்றுலா பயணிகள் அந்த ஓட்டலை தரைவழி தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தலாம். இல்லாவிட்டால் நம்பிக்கைக்குரிய செயலிகள் மூலமாக அறை முன்பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    Next Story
    ×