என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பாணாவரம் அருகே கை, கால்களை துண்டு துண்டாக வெட்டி ரவுடி கொலை
- பாணாவரம் போலீசார் உடலை கைப்பற்றி வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- 3 பேர் திருவள்ளூர் மாவட்ட போலீசார் என கூறி சரத்குமாரை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் பகுதியை சோ்ந்தவர் அசோக்குமாா் என்பவரது மகன் சரத்குமாா்(வயது 22) இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.
இன்று காலை பாணாவரம் அடுத்த புதூர் மலைமேடு கிராமத்தில் உள்ள சுடுகாடு அருகே கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டபட்ட நிலையில் கொலை செய்யபட்டு பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் டி.எஸ்.பி.பிரபு ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
பாணாவரம் போலீசார் உடலை கைப்பற்றி வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் 3 பேர் திருவள்ளூர் மாவட்ட போலீசார் என கூறி சரத்குமாரை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அவர்கள் சரத்குமாரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே பல வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ளதால் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாா் தனிப்படை அமைத்து துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த நபா்களை தேடி வருகின்றனா்.






