search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கச்சத்தீவு அருகே மீண்டும் அத்துமீறல்: ராமேசுவரம் மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்கி விரட்டியடித்த சிங்கள கடற்படை
    X

    கச்சத்தீவு அருகே மீண்டும் அத்துமீறல்: ராமேசுவரம் மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்கி விரட்டியடித்த சிங்கள கடற்படை

    • இலங்கை மீனவர்கள் கடலில் நீரோட்டம் பார்த்து கூண்டு அமைத்து மீன்பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
    • தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் முறையால் இலங்கை பகுதியில் மீன்வளம் பாதிக்கப்படுவதால், அவர்கள் மீது எல்லை தாண்டி வந்ததாக கூறி வழக்குப்பதிவு செய்து இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து செல்கிறார்கள்.

    ராமேசுவரம்:

    கடலுக்கு செல்லும் மீனவர்கள் அதிகப்படியான மீன்பாடுகளுடன் கரை திரும்ப வேண்டும் என்று வேண்டிய காலம் போய், இலங்கை கடற்படையினரிடம் சிக்காமல் பத்திரமாக கரை திரும்ப வேண்டும் என்று வேண்டும் காலம் வந்து விட்டது. அந்த அளவுக்கு தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் மொத்தம் 650 விசைப்படகுகள் உள்ளன. இதில் நேற்று காலை மீன்வளத்துறை அனுமதியுடன் 352 படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.

    ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்களின் 10-க்கும் மேற்பட்ட படகுகளை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் அவர்களை மிரட்டும் வகையில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதோடு, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகளையும் அறுத்து கடலில் வீசி எறிந்தனர். இதனால் மீனவர்கள் குறைந்த அளவு மீன்களுடன் கரை திரும்பினர்.

    அதேபோல் இன்று அதிகாலை மீண்டும் சிங்கள கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். நமது மீனவர்கள் கடலில் வலைகளை வீசி எதிர்திசையில் இழுத்துச் சென்று மீன் பிடிப்பார்கள். ஆனால் இலங்கை மீனவர்கள் கடலில் நீரோட்டம் பார்த்து கூண்டு அமைத்து மீன்பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் முறையால் இலங்கை பகுதியில் மீன்வளம் பாதிக்கப்படுவதால், அவர்கள் மீது எல்லை தாண்டி வந்ததாக கூறி வழக்குப்பதிவு செய்து இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து செல்கிறார்கள். இன்று காலையும் ராமேசுவரம் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்த சிங்கள கடற்படையினர் ராட்சத விளக்குகள் மூலம் ஒளியை ஏற்படுத்தி, மீனவர்கள் மீது தங்களது ரோந்து படகில் குவித்து வைத்திருந்த கற்களை எடுத்து சரமாரியாக வீசியுள்ளனர்.

    இதனை சற்றும் எதிர்பாராத ராமேசுவரம் மீனவர்கள் வலைகளை சுருட்டிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். இருந்தபோதிலும் சில கி.மீ. தூரம் வரை இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்து படகில் மீனவர்களை துரத்தி வந்து விரட்டியடித்துள்ளனர். இதையடுத்து காயங்களுடன் மீனவர்கள் கரை திரும்பினர்.

    இதுபற்றிய தகவலின் பேரில் ராமேசுவரம் மீன்வளத்துறை அதிகாரிகள் உடனடியாக கடலுக்குள் சென்று சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேலை நிறுத்த போராட்டம், இயற்கை சீற்றம், இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல்கள், சிறைப்பிடிப்பு, விசைப்படகுகள் பறிமுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மீனவர்கள் மீன்பிடி தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

    Next Story
    ×