search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு- என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர்
    X

    போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு- என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர்

    • பேராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளபடாது என என்.எல்.சி. நிர்வாகம் உத்தரவாதம் கொடுத்துள்ளது.
    • ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பினர்.

    கடலூர்:

    நெய்வேலியில் உள்ள என்.எல்.சி.யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், இன்கோ சர்வ் சொசைட்டி தொழிலாளர்கள் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

    பணிநிரந்தரம் செய்யும் வரை மாதம் 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 26-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களது போராட்டம் நேற்று 20 நாட்களாக நடைபெற்றது.

    இப்போராட்டத்தில் சங்கத் தலைவர் அந்தோணி செல்வராஜ், சிறப்பு தலைவர் சேகர், பொதுச் செயலாளர் செல்வமணி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் அருண் தம்புராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மற்றும் என்.எல்.சி. அதிகாரிகள், என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

    பேச்சுவார்த்தைக்கு பின் வெளியே வந்த ஜிவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க சிறப்பு தலைவர் சேகர் கூறும்போது, போராட்டத்தை எதிர்த்து என்.எல்.சி. நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் வருகிற 22-ந் தேதி தீர்ப்பு வரஉள்ளது. அதுவரை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கிறோம்.

    பேராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளபடாது என என்.எல்.சி. நிர்வாகம் உத்தரவாதம் கொடுத்துள்ளது. எனவே போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கிறோம். ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்றார்.

    அதன்படி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பினர்.

    Next Story
    ×