search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    லால்குடி அருகே அரசு கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது
    X

    லால்குடி அருகே அரசு கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது

    • பாதிக்கப்பட்ட மாணவிகள் சக மாணவர்களிடம் மனக்குமுறலை கொட்டி தீர்த்தனர்.
    • மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை சக மாணவர்கள் தாக்கிய சம்பவம் லால்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    லால்குடி:

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுலூர் ஊராட்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இது லால்குடியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட மாணவி- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    இதில் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த வினோத்குமார் வயது 43 என்பவர் வணிகவியல் துறை கௌரவ விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார்.

    திருச்சி ஈவெரா கல்லூரியில் இருந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குமிழலூர் இந்த கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

    இவர் குமலூர் கல்லூரியில் படித்து வரும் சில மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச எஸ்எம்எஸ் மற்றும் வாட்சப் மூலம் ஆபாச மெசேஜ்கள் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் சக மாணவர்களிடம் மனக்குமுறலை கொட்டி தீர்த்தனர். இதனால் மாணவர்கள் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தனர்.

    பின்னர் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் அந்தக் கல்லூரியின் வணிகவியல் துறை அறைக்குள் திடீரென புகுந்தனர். பின்னர் அங்கிருந்த விரிவுரையாளர் வினோத்குமாரை சரமாரியாக தாக்கினர்.

    மாணவர்கள் சுற்றி வளைத்து தாக்கியதால் அவரால் தப்பித்துக் கொள்ள முடியவில்லை.

    இதில் அவர் மயங்கி சரிந்தார். மேலும் ஆத்திரமடங்காத மாணவர்கள் அங்கிருந்த நாற்காலிகள் மற்றும் பெஞ்சுகளை அடித்து நொறுக்கினர்.

    அதன் பின்னர் 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்லூரி முன்பு திரண்டு வினோத்குமாரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்த லால்குடி உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன் துணைபோலிட்டு பிரண்டு அஜய் தங்கம் இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார் கார்த்திகேயினி ஆகியோர் சம்பவ இடம் விரைந்து வந்து போராட்டம் நடத்திய மாணவ மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் வினோத்குமாரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    இதை அடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை சக மாணவர்கள் தாக்கிய சம்பவம் லால்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×