search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒன்றரை மணி நேரம் வலியால் துடித்த கர்ப்பிணிக்கு டாக்டர்கள் இல்லாமல் பிரசவம்
    X

    ஒன்றரை மணி நேரம் வலியால் துடித்த கர்ப்பிணிக்கு டாக்டர்கள் இல்லாமல் பிரசவம்

    • பிரசவ வலி அதிகமாகி அலறித்துடித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவம் பார்க்காமலேயே பெண் குழந்தை பிறந்தது.
    • இரவு நேரங்களில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பணியில் இல்லாதது வேதனையாக உள்ளது.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள பாப்பான்குளத்தை சேர்ந்தவர் ராஜ் (வயது 32).

    இவரது மனைவி சுபத்ரா தேவி (24). இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் 2-வது பிரசவத்திற்கு சுபத்ரா தேவி திசையன்விளை அருகே உள்ள நாலந்துலாவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

    இரவு பிரசவத்திற்கான வலி வந்ததால் திசையன்விளையில் உள்ள 33 படுக்கைகள் கொண்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தனது கணவர் ராஜ் மற்றும் சித்தியுடன் பிரசவம் பார்க்க சென்றுள்ளார்.

    ஆனால் அங்கு இரவு நேரம் பணியில் உள்ள டாக்டர்களோ, நர்சுகளோ இல்லாததால் 1 மணி நேரமாக மருந்து, மாத்திரை, ஊசி என எந்த மருத்துவம் கொடுக்காமல் பிரசவ வலியில் சுபத்ரா ஜோதி அலறி துடித்துள்ளார். அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு பணியில் ஒரு பயிற்சி செவிலியரும், துப்புரவு பணியாளர் ஒருவரும் இருந்துள்ளனர்.

    அவர்களிடம் 108 ஆம்புலன்சை வர சொல்லுங்கள், நாங்கள் நெல்லை அரசு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுகிறோம் என்று கூறியும் ஒன்றரை மணி நேரமாக எந்த ஆம்புலன்சும் வரவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் பிரசவ வலி அதிகமாகி அலறித்துடித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவம் பார்க்காமலேயே பெண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் வெகுநேரம் கழித்து வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் கர்ப்பிணி பெண்ணை தையல் போடுவதற்கான பிரசவ வார்டுக்கு ஸ்ட்ரெச்சர் மூலம் அழைத்துச் சென்றனர்.

    இதுகுறித்து கர்ப்பிணி பெண்ணின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 33 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என்ற பெயர்தான் உள்ளதே தவிர இன்னும் சரியான மருத்துவ பணியாளர்கள் இல்லாமல் தான் இயங்கி வருகிறது. இதனால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் விபத்து போன்றவைகளில் சிக்கிய நோயாளிகள் கடும் அவதிக்கும், வேதனைக்கும் உள்ளாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

    கடந்த ஆகஸ்ட் 27-ந் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு செய்து பணியில் இல்லாத ஊழியர்களுக்கு மெமோ கொடுத்து சென்றார்.

    ஆனால் இங்கு 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படும் என விளம்பர பலகையில் வைக்கப்பட்ட நிலையில் இரவு நேரங்களில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பணியில் இல்லாதது வேதனையாக உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து முழுநேரமும் டாக்டர்கள் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×