search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்புக்கு 15 கம்பெனி துணை ராணுவ படை இன்று தமிழகம் வந்தது
    X

    பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்புக்கு 15 கம்பெனி துணை ராணுவ படை இன்று தமிழகம் வந்தது

    • தேர்தல் பாதுகாப்பு பணியில் துணை ராணுவ படையினர், போலீசார், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற போலீசார் ஈடுபட உள்ளனர்.
    • போலீசார், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவ வீரர்களின் விவரங்களை சேகரிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பாதுகாப்புக்காக 200 கம்பெனி துணை ராணுவ படையினர் வரவழைக்கப்பட உள்ளனர்.

    இதில் முதல் கட்டமாக 25 கம்பெனி துணை ராணுவ படையினர் வருகை தர உள்ளனர். இவர்களில் 15 கம்பெனி துணை ராணுவ படை இன்று தமிழகம் வந்துள்ளது. நேற்று நள்ளிரவில் பெங்களூரில் இருந்து சென்னை வந்த ரெயிலில் ஒரு கம்பெனி துணை ராணுவ படையினர் வந்தனர். இதில் 90 பேர் இடம் பெற்றிருந்தனர். இவர்களை வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னைக்கு இன்று பிற்பகலிலும், நாளையும் துணை ராணுவ படையினர் வெளிமாநிலங்களில் இருந்து வருகை தர உள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி என 2 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவின் பேரில் தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    அந்த வகையில் கோவை மாவட்டத்திற்கு பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்புக்காக கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய 5 கம்பெனி துணை ராணுவ படையினர் ரெயில் மூலம் இன்று வருகிறார்கள்.

    அவர்களை தேர்தல் பிரிவு அதிகாரி, போலீஸ் உயர் அதிகாரிகள் வரவேற்கிறார்கள். கோவையில் துணை ராணுவத்தினர் தங்குவதற்கான இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    பின்னர் அவர்கள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு கோவை மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். தொடர்ந்து அவர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தேர்தல் பாதுகாப்பு பணியில் துணை ராணுவ படையினர், போலீசார், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற போலீசார் ஈடுபட உள்ளனர்.

    இதற்காக போலீசார், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவ வீரர்களின் விவரங்களை சேகரிக்கப்பட்டு வருகிறது. விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, விரைவில் போலீசார், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர் என அனைவரும் பாதுகாப்பு பணியை தொடங்க உள்ளனர்.

    Next Story
    ×