search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பரமக்குடி அருகே வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை
    X

    பரமக்குடி அருகே வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை

    • ஹரீஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    • சில நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமக்குடி:

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள குமாரக்குறிச்சியை சேர்ந்தவர் ஹரிஷ் என்ற வாணி கருப்பு (வயது 21). இவரது நண்பர் அபிபாலன் (21). இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த வேறு சில நண்பர்களுக்கும் 'கெத்து' காட்டுவது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இருப்பினும் ஒன்றாக பழகி வந்துள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று பரமக்குடி ஆற்றுப்பாலம் பகுதியில் வழக்கம்போல் இருதரப்பினரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். அப்போது அவர்களுக்குள் யார் அதிக கெத்து என்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

    பின்னர் ஒரு தரப்பினர் அங்கிருந்து கோபமாக சென்றதாக கூறப்படுகிறது. ஹரிசும், அபிபாலனும் அந்த பகுதியில் நின்றிருந்தனர். அப்போது சில மர்ம நபர்கள் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது அவர்களுக்குள் கை கலப்பு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த வாள் மற்றும் கத்தியால் ஹரீசை சரமாரியாக வெட்டினர். மேலும் பீர்பாட்டிலை உடைத்து முகத்தில் தாக்கினர். இதில் நிலைகுலைந்த ஹரீஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    உடனிருந்த அபிபாலனையும் மர்ம நபர்கள் பீர்பாட்டிலால் நெஞ்சில் குத்தினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து பரமக்குடி டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த அபிபாலனை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் ஹரீஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அபிபாலன் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் சில நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் கைப்பற்றி அதனடிப்படையில் சில நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மேலும் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுப்பதற்காக எதிர் தரப்பினர் வசிக்கும் வைகை நகர் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நண்பர்களுக்குள் யார் கெத்து என்பதில் ஏற்பட்ட பிரச்சினையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரமக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×