search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புது கட்சி தொடங்கும் ஓ.பன்னீர்செல்வம்: அம்மா தி.மு.க. என பெயர் சூட்ட பரிசீலனை
    X

    புது கட்சி தொடங்கும் ஓ.பன்னீர்செல்வம்: அம்மா தி.மு.க. என பெயர் சூட்ட பரிசீலனை

    • எடப்பாடி பழனிசாமியோ ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளார்.
    • அ.தி.மு.க. கொடியில் சிறிய அளவில் மாற்றங்களை செய்து புதிய கொடியை வடிவமைக்க ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு ஆகியவை அங்கீகரித்திருந்த நிலையில் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்திருந்த வழக்கிலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்துள்ளது.

    இது எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்திருக்கும் முழுமையான வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் பின்னடைவாகவே அமைந்திருக்கிறது.

    இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் என்ன? என்பது மிகப்பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது. இது அவரது ஆதரவாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுக்கு மாவட்ட செயலாளர், கிளை செயலாளர், ஒன்றிய செயலாளர் என பதவிகளையும் கொடுத்து வந்துள்ளார்.

    ஓ.பன்னீர்செல்வத்துடன் இருக்கும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்து செயல்படும் எண்ணத்திலேயே இருந்து வந்தனர்.

    ஆனால் எடப்பாடி பழனிசாமியோ ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளார்.

    அதேநேரத்தில் அவருடன் இருக்கும் ஆதரவாளர்கள் அனைவரையும் தன்பக்கம் இழுத்துவிட வேண்டும் என்பதில் அவர் உறுதியுடன் உள்ளார்.

    இது ஓ.பன்னீர்செல்வத்துக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். தன்னுடன் இணைந்து செயல்பட்டு வரும் ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வுக்கு மீண்டும் சென்று விட்டால் நம்மால் எதுவும் செய்ய முடியாது என்பதை ஓ.பி.எஸ். உணர்ந்துள்ளார்.

    இதையடுத்து ஆதரவாளர்களை தக்க வைத்துக்கொள்ள அவர் காய் நகர்த்தி வருகிறார். இப்படியே தனது நிலைப்பாட்டை கொண்டு சென்றால் ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் அ.தி.மு.க. பக்கம் சென்று விடுவார்கள் என்கிற அச்சமும் ஓ.பி.எஸ்.சுக்கு ஏற்பட்டுள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் ஆதரவாளர்களை தன்வசப்படுத்தி வைத்துக் கொள்வதற்காக புதிய கட்சியை தொடங்க அவர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அ.தி.மு.க. கொடியில் சிறிய அளவில் மாற்றங்களை செய்து புதிய கொடியை வடிவமைக்க திட்டமிட்டு உள்ள ஓ.பன்னீர் செல்வம் புதிய கட்சிக்கு அம்மா தி.மு.க. அல்லது புரட்சி தலைவி அ.தி.மு.க. என 2 பெயர்களை தேர்வு செய்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஒருவர் கூறியதாவது:-

    எங்கள் அணியில் ஏற்கனவே 82 மாவட்ட செயலாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். கிளை கழக நிர்வாகிகளும் செயல்பட்டு வருகிறார்கள்.

    அ.தி.மு.க.வில் இருப்பது போன்று ஒன்றிய அளவிலும், நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாசறை, பேரவைக்கும் நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    தன்னை நம்பி வந்த ஆதரவாளர்களை எந்த சூழ்நிலையிலும் கைவிட்டு விடக்கூடாது என்பதில் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக உள்ளார். இதனாலேயே விரைவில் புதிய கட்சியை தொடங்க அவர் திட்டமிட்டுள்ளார். புரட்சி தலைவி, புரட்சி தலைவர் ஆகிய வார்த்தைகள் கட்சியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

    அதேநேரத்தில் 'அம்மா' என்கிற பெயருடன் புதிய கட்சியை தொடங்குவது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஓ.பி.எஸ். தொடங்க உள்ள புதிய கட்சிக்கு அம்மா தி.மு.க. என்கிற பெயரையே சூட்டுவதற்கு கூடுதல் வாய்ப்புகள் உள்ளன.

    அ.தி.மு.க.வுடன் மீண்டும் இணைந்து செயல்பட வாய்ப்பு கிடைக்கும். அதற்கான வழியை டெல்லி பா.ஜனதா தலைவர்கள் நிச்சயம் செய்து தருவார்கள் என மலைபோல நம்பி இருந்தோம். ஆனால் நாங்கள் நினைத்தது ஒன்று... நடந்தது ஒன்றாகி விட்டது.

    அதேநேரத்தில் கோர்ட்டு மூலமாக ஏதாவது விடிவு காலம் பிறக்கும் என்றும் நம்பி இருந்தோம். அந்த வகையிலும் அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்ந்து செயல்பட வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. இதனால் எங்கள் பலத்தை காட்ட தனிக்கட்சி ஒன்றுதான் தீர்வு என்றாகி விட்டது.

    புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடி ஆகியவற்றை விரைவில் பெரிய கூட்டத்தை கூட்டி அறிவிக்க ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார்.

    அதற்கான இடம், தேதி ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும். தனிக்கட்சியை தொடங்கிய பின்னர் பாராளுமன்ற தேர்தலுக்குள் பெரிய பொதுக்கூட்டத்தையோ அல்லது மாநாட்டையோ நடத்தவும் முடிவு செய்துள்ளோம். பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து களம் இறங்குவோம். அப்போது எங்களது வாக்கு வங்கி என்ன என்பது தெரிய வரும்.

    தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓ.பி.எஸ்.சுக்கு இருக்கும் செல்வாக்கு என்ன? என்பதை கண்டிப்பாக நிரூபித்துக் காட்டுவோம். இது அவரது எதிர்கால வெற்றிக்கு வழிவகுப்பதாக அமையும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×