search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம்: ஓ.பன்னீர்செல்வம் அணி புதிய வழக்கு
    X

    அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம்: ஓ.பன்னீர்செல்வம் அணி புதிய வழக்கு

    • அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. சென்னை ஐகோர்ட்டில் புதிய வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
    • கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் தன்னை கட்சியில் இருந்து நீக்கினார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவு நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

    இதனை எதிர்த்து ஓ.பி.எஸ். அணியினர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்புகள் கூறப்பட்டன. அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்று முதலில் தீர்ப்பளிக்கப்பட்டது.

    இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் பொதுக்குழு செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது.

    இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரியும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 23-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று கூறப்பட்டு இருந்தது.

    ஆனாலும் இந்த தீர்ப்பை எதிர்த்து உரிமையியல் வழக்கு தொடருவதற்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை எனவும், உரிமையியல் வழக்கை தொடரலாம் எனவும் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்திருந்தது.

    இதனை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. சென்னை ஐகோர்ட்டில் புதிய வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் தன்னை கட்சியில் இருந்து நீக்கினார்கள். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தனர். மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்தும் தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.

    எனவே அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி செந்தில்குமார் ராம மூர்த்தி முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

    அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு தங்களுக்கு சாதகமாகவே உள்ளது என்று கூறி எடப்பாடி பழனிசாமி அணியினர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் இரட்டை இலை சின்னத்தில் எடப்பாடி பழனிசாமி அணி போட்டியிட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமியை ஒற்றை தலைமையாக வர்ணித்து அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்களையும் ஒட்டினார்கள்.

    இப்படி அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலமாக முடிவுக்கு வந்திருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டிருந்தது.

    இந்த நிலையில்தான் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் சென்னை ஐகோர்ட்டில் புதிய வழக்கை தொடர்ந்துள்ளார்.

    இதன் காரணமாக ஐகோர்ட்டு விசாரணையின் போது எந்த மாதிரியான உத்தரவை ஐகோர்ட்டு வழங்க போகிறது என்பது புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×