search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆளும் கட்சிக்கு ராஜயோகம்... 16 புயல்கள்  உருவாகும் அபாயம்... குரோதி ஆண்டு ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணிப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஆளும் கட்சிக்கு ராஜயோகம்... 16 புயல்கள் உருவாகும் அபாயம்... குரோதி ஆண்டு ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணிப்பு

    • நடிப்புத்துறையை சேர்ந்த ஒரு முக்கிய நடிகர் புதிய கட்சி தொடங்குவார்.
    • கண் நோய், இருமல், காதுவலி, விஷ காய்ச்சல் அதிக அளவில் மக்களை பாதிக்கும்.

    ஆண்டுதோறும் நடக்கப் போகும் நிகழ்வுகளை நட்சத்திர, கிரக நிலைகளை ஆராய்ந்து, முன்கூட்டியே கணித்து பஞ்சாங்கம் வெளியிடப்படுகிறது.

    இதில் ஆற்காடு கா.வெ.சீதாராமய்யர் பஞ்சாங்கம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

    தமிழ் ஆண்டுகள் வரிசையில், நடப்பு சோபகிருது ஆண்டுக்கு அடுத்து வரும் குரோதி ஆண்டுக்கான பலன்களாக ஆற்காடு பஞ்சாங்கத்தில் ஜோதிடர் சுந்தரராஜன் ஐயர் கணித்து கூறியிருப்பதாவது:-

    இயற்கை நிகழ்வுகளில் மழை வெள்ள பாதிப்பு அதிகமாக இருக்கும். குறிப்பாக மும்பை, பீகார், ஒடிசா, காசி, கயா, மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், தெலுங்கானா பகுதிகளில் கடும் வெள்ளம் ஏற்படும்.

    தென்மேற்கு பருவமழை அதிகளவில் கொட்டும். 16 புயல்கள் உருவாகும். அதில் 4 புயல்கள் ஆரம்ப கட்டத்திலேயே வலுவிழந்து விடும். 10 புயல்களில் 4 புயல்கள் காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி வலுவிழந்துவிடும். 6 புயல்களால் கடும் சூறாவளி காற்றுடன் கனமழை பொழியும். வெள்ளம் அதிக அளவில் ஏற்படும்.

    அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும். எதிர்க்கட்சிகளுக்கு போராட்டமான காலமாகும்.

    இந்த ஆண்டு ஜெக ஜாதகத்தில் அமலா யோகம் பெற்றிருப்பதால் வரும் தேர்தலில் ஆளும் கட்சிக்கு ராஜயோக காலமாக இருக்கும்.

    அரசியல் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள் வழக்குகளில் சிக்கும் அபாயநிலை உருவாகும். இந்த ஆண்டு தன்வந்தர்கள் ஏழைகளாக மாறும் சூழ்நிலை ஏற்படலாம். நடிப்புத்துறையை சேர்ந்த ஒரு முக்கிய நடிகர் புதிய கட்சி தொடங்குவார்.


    ஜோதிடர் சுந்தரராஜன் ஐயர்

    பூண்டு, வெங்காயம், புளி, மாங்காய், கடுகு, அரிசி விலை உயரும். மின்சார உற்பத்தி பாதிப்பால் மின்வெட்டு அதிகரிக்கும். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயரும்.

    கண் நோய், இருமல், காதுவலி, விஷ காய்ச்சல் அதிக அளவில் மக்களை பாதிக்கும். புற்றுநோய்க்கு இந்தியா மருந்து கண்டு பிடிக்கும். வவ்வால்கள் தொல்லை அதிகமாக இருக்கும்.

    2024-ம் ஆண்டில் ஆதாயம் 47 ஆகவும் வருவாய் 71 ஆகவும் இருக்கும். புதிய வரிகள் விதிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். தனியார் நிறுவனங்கள் அதிக அளவிலான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

    கையில் பணம் வைத்திருப்பது குறையும். ஆன்லைன் வியாபாரம் சூடுபிடிக்கும். மோசடிகள் அதிகரிக்கும். பாக பிரச்சனைகள் சம்பந்தமாக அதிக வழக்குகள் ஏற்படும். போலீசார் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

    வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களால் திருட்டு கைவரிசைகள் தமிழகத்தில் அதிகரிக்கலாம்.

    பாரத திருநாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள அண்டை நாடான பாகிஸ்தான் அல்லது தெற்கு பகுதியில் உள்ள இலங்கை நமது நாட்டுடன் இணையும் சூழ்நிலை உருவாகலாம்.

    சிறுபான்மையினர் வாழும் நாடுகளில் எல்லை பிரச்சனைகள் உருவாகி போர் மூளும் சூழல் உருவாகலாம்.

    இவ்வாறு பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×