search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விருகம்பாக்கத்தில் நள்ளிரவில் நாட்டு வெடிகுண்டு வீசி வாலிபரை கொல்ல முயற்சி- மர்ம கும்பல் தப்பி ஓட்டம்
    X

    விருகம்பாக்கத்தில் நள்ளிரவில் நாட்டு வெடிகுண்டு வீசி வாலிபரை கொல்ல முயற்சி- மர்ம கும்பல் தப்பி ஓட்டம்

    • தீனதயாளன் கொலை வெறி கும்பலிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார்.
    • நாட்டு வெடிகுண்டு வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    போரூர்:

    விருகம்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பம் காமராஜர் சாலை பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன் (வயது21). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. நேற்று நள்ளிரவு அவர், வீட்டின் அருகே உள்ள ஏரிக்கரை தெருவில் நின்று கொண்டு இருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் திடீரென தீனதயாளன் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அதிர்ஷ்டவசமாக தீனதயாளன் மீது நாட்டு வெடிகுண்டு விழவில்லை. அவரது அருகே சிறிது தூரத்தில் விழுந்து நாட்டு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தீனதயாளன் கொலை வெறி கும்பலிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார். எனினும் மர்ம கும்பல் அவரை பட்டாக் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் விரட்டிச்சென்றனர்.

    இதற்கிடையே நாட்டுவெடிகுண்டு வெடித்த சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் தீனதயாளனை மர்ம கும்பல் அரிவாளுடன் விரட்டி செல்வதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.

    சிறிது நேரத்தில் கொலைவெறி கும்பலிடம் இருந்து தப்பிய தீனதயாளன் வீட்டுக்கு திரும்பி வந்தார்.அவர்தான் அணிந்திருந்த சட்டையை மாற்றிக் கொண்டு "அனைவரும் இங்கிருந்து கிளம்பி சென்று விடுங்கள் ஆபத்து உள்ளது" என்று அவரது தாயிடம் கூறிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    நாட்டுவெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பற்றி அறிந்ததும் விருகம்பாக்கம் உதவி கமிஷனர் சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஜார்ஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    தீனதயாளன் எங்கு சென்றார் என்று தெரிய வில்லை. அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    நேற்று நண்பர் ஒருவரது பிறந்தநாள் விழாவில் தீனதயாளன் கலந்து கொண்டார். அப்போது அவர் மதுபோதையில் அங்கிருந்த ஒருவரையும் அவரது கூட்டாளிகளையும் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இந்த தகராறில் அந்த கும்பல் தீனதயாளனை தீர்த்துக்கட்ட நாட்டு வெடி குண்டை வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் நாட்டு வெடிகுண்டு வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×