என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காட்டு யானை தாக்கி தாய்-மகள் படுகாயம்
    X

    காட்டு யானை தாக்கி தாய்-மகள் படுகாயம்

    • மூங்கில் தோப்புக்குள் இருந்து காட்டு யானை ஒன்று குட்டியுடன் சாலையை கடக்க முயன்றது.
    • காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சுல்தான்பத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே கோரஞ்சால், சப்பந்தோடு, சுங்கம், கண்ணம்பள்ளி உள்பட பல பகுதிகளில் காட்டுயானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

    கோரஞ்சால் சப்பந்தோடு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி புனிதா (வயது42). இவர்களுக்கு அஸ்வதி (20) என்ற மகள் உள்ளார்.

    அஸ்வதி கூடலூரில் உள்ள அரசு கல்லூரியில் பி.காம் சி.ஏ., படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அஸ்வதி கல்லூரி செல்வதற்காக தனது தாயாருடன் வீட்டில் இருந்து பஸ் நிறுத்தத்திற்கு நடந்து சென்றார்.

    அப்போது சாலையையொட்டிய மூங்கில் தோப்புக்குள் இருந்து காட்டு யானை ஒன்று குட்டியுடன் சாலையை கடக்க முயன்றது.

    யானை வருவதை பார்த்ததும் 2 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். யானை அவர்களை விடாது துரத்தி சென்றது.

    எனினும் ஒரு கட்டத்தில் காட்டு யானை 2 பேரையும் துதிக்கையால் பிடித்து தூக்கி வீசி தாக்கியது. இதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்து சத்தம் போட்டனர்.

    இவர்களின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். யானை நிற்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சத்தம் போட்டு யானையை அங்கிருந்து விரட்டினர்.

    தொடர்ந்து காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சுல்தான்பத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு புனிதா கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அஸ்வதி சுல்தான் பத்தேரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சம்பவம் குறித்து அறிந்த சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த், வனகாப்பாளர் குணசேகரன் ஆகியோர் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ஆறுதல் கூறினர்.

    Next Story
    ×