search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு- சி.பி.சி.ஐ.டி விசாரணை அதிகாரியாக ஷகில் அக்தர் நியமனம்
    X

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு- சி.பி.சி.ஐ.டி விசாரணை அதிகாரியாக ஷகில் அக்தர் நியமனம்

    • கொடநாடு வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணை அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • கொடநாடு வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி அதிகாரியாக கூடுதல் டி.ஜி.பி. ஷகில் அக்தர் என்பவரை தமிழக அரசு நியமித்துள்ளது.

    கோவை, அக்.6-

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது.

    இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் அரங்கேறியது. அப்போது பல்வேறு ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டது.

    கொள்ளை சம்பவத்தின்போது, அதனை தடுக்க முயன்ற காவலாளி ஒம்பகதூர் என்பவரும் கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் தமிழகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ், சதீசன், திபு உள்பட 10 பேர் கைதுசெய்யப்பட்டனர். தற்போது அவர்கள் ஜாமீனில் உள்ளனர்.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்துபோனார்.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் இந்த வழக்கில் மறு விசாரணை நடந்து வருகிறது. இதற்காக 5 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகரும் நேரடியாகவே விசாரணை மேற்கொண்டார்.

    தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் பல நபர்களிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.

    இதுவரை தனிப்படையினர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, சசிகலாவின் உறவினர் விவேக், கொடநாடு மேலாளர் நடராஜன், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ் உள்பட பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    இது தொடர்பான வழக்கு ஊட்டியில் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    சி.பி.சி.ஐ. அதிகாரி நியமனம்

    தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு கொடநாடு வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. இதற்கான உத்தரவை தமிழக டி.ஜி.பி.சைலேந்திரபாபு பிறப்பித்தார்.

    கொடநாடு வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணை அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி கொடநாடு வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி அதிகாரியாக கூடுதல் டி.ஜி.பி. ஷகில் அக்தர் என்பவரை தமிழக அரசு நியமித்துள்ளது.

    கொடநாடு வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டு, விசாரணை அதிகாரியும் நியமிக்கப்பட்டு விட்டதால், அவர் வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்று உடனடியாக விசாரணையை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×