search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கந்த சஷ்டி விழாவின் 2-ம் நாளான இன்று திருச்செந்தூர் கோவிலில் திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
    X

    கந்த சஷ்டி விழாவின் 2-ம் நாளான இன்று திருச்செந்தூர் கோவிலில் திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்

    • கந்த சஷ்டி திருவிழாவின் 6-ம் நாளான 18-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.
    • 24-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடைபெற்று சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்தலுடன் விழா நிறைவு பெறுகிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

    நேற்று மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதின கந்த சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி, தங்கரதத்தில் எழுந்தருளி கிரிப்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    நிகழ்ச்சியில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் கோவிலுக்கு வந்து கடலில் நீராடியும், நாழிகிணறு தீர்த்தத்தில் நீராடியும் விரதம் மேற்கொண்டு வருகின்றனர். பலர் 6 நாட்களும் பால், எழுமிச்சைச்சாறு பருகி கந்த சஷ்டி கவசம் பாடியும் , பஜனை பாடல்கள் பாடி விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

    2-ம் நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதயமார்த்தான்ட அபிஷேகம், காலை 7 மணிக்கு யாக பூஜை தொடங்கியது. பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனையும், 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் மண்டபம் எழுந்தருளினார்.

    அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. அங்கிருந்து மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் திருவாவடுதுறை ஆதின சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளி அங்கு அபிஷேகம், அலங்காரமாகி கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    கந்த சஷ்டி திருவிழாவின் 6-ம் நாளான 18-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.

    7-ம் நாளான 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலையில் தெய்வானை அம்பாள் தவசு காட்சிக்கு புறப்படுதல், மாலை 6.30 மணிக்கு அம்பாளுக்கு, சுவாமி காட்சி கொடுத்து தோல் மாலை மாற்றுதல், இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் மேல கோபுரம் அருகில் உள்ள மண்டபத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது.

    24-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடைபெற்று சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்தலுடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன் கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×