search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பரங்கிமலையில் மேலும் 3 கிரீடர்கள் பொருத்தும் பணி இன்று இரவு தொடங்கும்: ரெயில்வே அதிகாரிகள் தகவல்
    X

    பரங்கிமலையில் மேலும் 3 கிரீடர்கள் பொருத்தும் பணி இன்று இரவு தொடங்கும்: ரெயில்வே அதிகாரிகள் தகவல்

    • ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகரில் இருந்து பரங்கிமலையை இணைக்கும் வகையிலும் ஏற்கனவே தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
    • பரங்கிமலை ரெயில் நிலையத்தில் பறக்கும் ரெயில் பணிக்காக இரும்பு பாலம் அமைக்கும் பணியில் 6 இரும்பு கிரீடர்கள் பொருத்தப்படுகிறது.

    சென்னை:

    சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் 150 ரெயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இதில் தினமும் 2 லட்சம் பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் வேளச்சேரி மற்றும் பரங்கிமலையை இணைக்கும் வகையில் 5 கி.மீ. தூரத்துக்கு பறக்கும் ரெயில் பாதை அமைக்கும் பணிகள் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    ஆனால் ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகரில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது. அதன் பிறகு இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு முதல் மீண்டும் பணிகள் தொடங்கியது. ரூ.734 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மொத்தம் உள்ள 5 கி.மீ தூரத்தில், 4.5 கி.மீ.தூரத்துக்கு 167 தூண்களுடன் ரெயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாதையில் புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை ஆகிய இடங்களில் ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் முடிவடைந்துள்ளன.

    ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகரில் இருந்து பரங்கிமலையை இணைக்கும் வகையிலும் ஏற்கனவே தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கிருந்து பரங்கிமலை ரெயில் நிலையத்தை இணைக்கும் வகையில் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் சென்னை கடற்கரை- தாம்பரம் ரெயில் பாதையின் மேலே 100 அடி உயரத்தில் இரும்பு பாலம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த இரும்பு பாலத்துக்காக 51 மீட்டர் நீளம், 3 மீட்டர் உயரம் கொண்ட 6 இரும்பு கிரீடர்கள் பொருத்தி இரும்பு பாலம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணிக்காக சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் நேற்று காலை 10 மணி முதல் மாலை 3.30 மணி வரை 54 மின்சார ரெயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டன. முதல் நாளான நேற்று மட்டும் 3 இரும்பு கிரீடர்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    இன்னும் 3 இரும்பு கிரீடர்கள் பொருத்தும் பணி இன்று இரவு நடைபெற உள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    பரங்கிமலை ரெயில் நிலையத்தில் பறக்கும் ரெயில் பணிக்காக இரும்பு பாலம் அமைக்கும் பணியில் 6 இரும்பு கிரீடர்கள் பொருத்தப்படுகிறது.

    முதல் நாளான நேற்று 3 இரும்பு கிரீடர்கள் பொருத்தப்பட்டன. இதன் மூலம் 50 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த பணியில் 100 என்ஜினீயர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மீதமுள்ள பணிகள் இன்று இரவு 11 மணிக்கு மேல் தொடங்கும்.

    இன்னும் 2 நாட்களில் மேலும் 3 இரும்பு கிரீடர்கள் பொருத்தும் பணி முடிவடைய வாய்ப்பு உள்ளது. இந்த இரும்பு கிரீடர்கள் ஒவ்வொன்றும் 75 டன் எடை கொண்டவை. மொத்தம் 6 கிரீடர்கள், அவற்றை பொருத்துவதற்கான இரும்புகள் என மொத்தம் 540 டன் எடை கொண்டவை. மீதமுள்ளவற்றில் 2 இரும்பு கிரீடர்கள் தண்டவாள பகுதிக்கு கொண்டு வரப்பட்டு விட்டன. இன்னும் ஒரு இரும்பு கிரீடர் வெளியே உள்ளது. அதுவும் தண்டவாள பகுதிக்கு கொண்டுவரப்பட்டு பொருத்தப்படும்.

    வருகிற மார்ச் மாதத்துக்குள் முழு பணிகளையும் முடித்து இந்த வழித்தடத்தில் பறக்கும் ரெயில்களை இயக்க திட்டமிட்டு உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×