என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பெரியபாளையத்தில் மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை
- கொள்ளை சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல் நிலையத்தில் சரசா புகார் செய்தார்.
- வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் ஊராட்சியை சேர்ந்த அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர் மூதாட்டி சரசா(வயது67).
இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். ஐந்து மகள்கள், ஒரு மகன் என ஆறு பிள்ளைகளுக்கும் திருமணம் நடந்து அவர்கள் தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், மூதாட்டி சரசா மட்டும் தனது கணவர் கட்டிய வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை பூட்டிக்கொண்டு தனது பேத்தியை காண சென்னைக்கு சென்று இருந்தார். இன்று மாலை வீட்டுக்கு வந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
மர்ம நபர்கள் சரசாவின் வீட்டின் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ரொக்கப்பணம் ரூ.30,000, ஒரு சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துக் கொண்டு பீரோவில் இருந்த பொருட்களை அள்ளி கீழே வீசிவிட்டு சென்றதைக் கண்டார்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல் நிலையத்தில் சரசா புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உத்தரவின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவரது வீட்டிற்கு எதிர் வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.






