search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க. அலுவலகம் அலங்கோலமாக காட்சி அளித்தது- முக்கிய ஆவணங்கள் மாயம்

    • கீழ் தளத்தில் முக்கிய நிர்வாகிகள், மாநில நிர்வாகிகளின் அலுவலக அறைகளில் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டு இருந்தன.
    • ஆண்டு மலர் மற்றும் பொன் விழா புத்தகங்களின் ஆவணங்கள், பைல்கள் சிதறி கிடந்தன.

    சென்னை:

    அ.தி.மு.க. அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டதை அடுத்து சி.வி.சண்முகம் மற்றும் அலுவலக ஊழியர்கள் உள்ளே ஒவ்வொரு அறையாக சென்று பார்த்தனர். அலுவலகம் முழுவதும் பொருட்கள் சிதறி கிடந்து அலங்கோலமாக காட்சி அளித்தது. அனைத்து அறைகளின் கதவுகளும் உடைக்கப்பட்டு இருந்தது.

    மேஜைகள், நாற்காலிகள் நொறுக்கப்பட்டு சேதம் அடைந்திருந்தன. கம்ப்யூட்டர்களும் உடைக்கப்பட்டு இருந்தன. கீழ் தளத்தில் முக்கிய நிர்வாகிகள், மாநில நிர்வாகிகளின் அலுவலக அறைகளில் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டு இருந்தன. ஆண்டு மலர் மற்றும் பொன் விழா புத்தகங்களின் ஆவணங்கள், பைல்கள் சிதறி கிடந்தன.

    முதல் தளத்தில் தலைமை கழகத்தின் முக்கிய அலுவலகம் உள்ளது. அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு கீழே கிடந்தது. மேஜை, கம்ப்யூட்டர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நிர்வாகிகள் கூட்டங்கள் நடைபெறும் அறையில் எடப்பாடி பழனிசாமி படம் இருந்த பேனர் கிழிக்கப்பட்டு இருந்தது.

    2-வது தளத்தில் நூலகம் உள்ளிட்ட அறைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.

    3-வது தளத்தில் கட்சியின் கணக்கு வழக்குகளின் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறை கதவு உடைக்கப்பட்டது. அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு கணக்கு விவரங்களின் முக்கிய ஆவணங்கள் மாயமாக இருந்தது. அதேபோல் மற்றொரு அறையில் ஜெயலலிதாவுக்கு கட்சி சார்பில் வழங்கப்பட்ட பரிசு பொருட்களும் அவர் கட்சிக்கு வழங்கிய பரிசு பொருட்களும் வைக்கப்பட்டு இருந்தது.


    அந்த அறைகளை இரும்பு கடப்பாறையால் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அந்த அறையில் இருந்த பரிசு பொருட்கள் மாயமாகி இருந்தது.

    இதுகுறித்து அ.தி.மு.க. அலுவலக மேனேஜர் தர்மா கூறும்போது, அலுவலகத்தின் 3-வது மாடியில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது. அந்த பொருட்களை காணவில்லை. கம்ப்யூட்டரில் இருந்த ஹார்டு டிஸ்க், கணக்கு விவர ஆவணங்கள் அனைத்தும் மாயமாகி இருக்கிறது என்றார்.

    Next Story
    ×