search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கூட்டாளி கொலை வழக்கில் வரிச்சியூர் செல்வத்துக்கு நிபந்தனை ஜாமின்: மதுரை ஐகோர்ட் உத்தரவு
    X

    கூட்டாளி கொலை வழக்கில் வரிச்சியூர் செல்வத்துக்கு நிபந்தனை ஜாமின்: மதுரை ஐகோர்ட் உத்தரவு

    • கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள வரிச்சியூர் செல்வம் ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
    • மனு நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    மதுரை:

    விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 38). இவர், தனது மனைவி, குழந்தைகளுடன் மதுரையில் தங்கியிருந்தார். பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

    கடந்த 2020-ம் ஆண்டு மதுரை டி.குன்னத்தூர் ஊராட்சி தலைவர் கிருஷ்ண ராஜ், நண்பர் முனியசாமி ஆகிய 2 பேர் கொல்லப்பட்ட வழக்கில் செந்தில்குமாரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

    இதனை அறிந்த வரிச்சியூர் செல்வம் அறிவுறுத்தலின் பேரில் செந்தில்குமார் சென்னை சென்றுவிட்டார். அங்கு இருந்த செந்தில்குமார் திடீரென மாயமாகி விட்டதாகவும் அவரை கண்டுபிடிக்க கோரியும் அவரது மனைவி விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் செய்தார்.

    அவரை போலீசார் தீவிரமாக தேடினர். அப்போது அவரை வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளிகள் சுட்டுக்கொன்று, அவரது உடலை தாமிரபரணி ஆற்றில் வீசியது தெரிந்தது. இதுசம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் பலர் கைதாகியுள்ளனர்.

    தற்போது இந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள வரிச்சியூர் செல்வம், தனக்கு ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    முடிவில், மனுதாரருக்கு ஜாமின் அளிக்கப்படுகிறது. அவர் மாதந்தோறும் சம்பந்தப்பட்ட போலீசில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்று நிபந்தனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    Next Story
    ×