search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி பலி: கட்டிடம் தரைமட்டமானது
    X

    சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி பலி: கட்டிடம் தரைமட்டமானது

    • வெம்பக்கோட்டை ஒன்றியம் பனையடிப்பட்டி கிராமத்தில் ஜெயபால் என்பவருக்கு சொந்தமான ஜெயதர்ஷினி பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.
    • தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த வழக்கமான பணிகளை தொடங்கிய சண்முகராஜ், வெடி குழாய்களுக்குள் மருந்துகளை செலுத்திக் கொண்டு இருந்தார்.

    சிவகாசி:

    தீபாவளி பண்டிகை கடந்த மாதம் 12-ந்தேதி கொண்டாடப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டுக்கான பட்டாசு உற்பத்தியை சிவகாசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இயங்கும் பட்டாசு ஆலைகள் தொடங்கியுள்ளன.

    நடந்து முடிந்த தீபாவளிக்கு ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசுகள் விற்பனையானது. அதனை இந்தாண்டு மிஞ்சும் வகையில் இருப்பதற்கான நடவடிக்கைகளில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு தீபாவளிக்காக கடந்த மாதம் (நவம்பர்) 24-ந்தேதி பட்டாசு தயாரிப்பு பணியை ஆலைகள் மீண்டும் தொடங்கின.

    விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, செவல்பட்டி, ஏழாயிரம் பண்ணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக வரப்போகும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை கருத்தில் கொண்டும் பட்டாசு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த பணிகள் பூஜைகளுடன் தொடங்கும்போதே அடுத்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனை நன்றாக இருக்க வேண்டும், விபத்தில்லாமல் பட்டாசு ஆலைகளில் உற்பத்தி நடைபெற வேண்டும் என தொழிலாளர்கள் வேண்டிக்கொண்டனர். ஆனாலும் இன்று முதல் விபத்து நடந்துள்ளது. அது பற்றிய விபரம் வருமாறு:-

    சிவகாசி அருகே வெம்பக்கோட்டை ஒன்றியம் பனையடிப்பட்டி கிராமத்தில் ஜெயபால் என்பவருக்கு சொந்தமான ஜெயதர்ஷினி பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையானது மாவட்ட வெடிபொருள் கண்காணிப்பு துறை உரிமத்துடன் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை பனையடிப்பட்டி அருகேயுள்ள உட்கடை கண்டியாபுரம் கிராமத்தை சேர்ந்த பொம்மு ரெட்டியார் மகன் சண்முகராஜ் (வயது 36) என்பவர் முதல் நபராக பணிக்கு வந்தார்.

    தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த வழக்கமான பணிகளை தொடங்கிய சண்முகராஜ், வெடி குழாய்களுக்குள் மருந்துகளை செலுத்திக் கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக உராய்வு ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறின. அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்தில் பற்றிய தீயானது அந்த கட்டிடம் முழுவதும் பரவியது.

    இதில் அந்த கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. அதன் இடிபாடுகளுக்குள் சிக்கிய சண்முகராஜ் உடல் நசுங்கி பலியானார். விபத்து குறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக விரைந்து வந்த ஏழாயிரம் பண்ணை தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன் தலைமையில் வந்த வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியிருந்த சண்முகராஜ் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பட்டாசு ஆலை விபத்தில் பலியான சண்முகராஜூக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இச்சம்பவம் குறித்து ஏழாயிரம் பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பட்டாசு ஆலை திறந்த சில நிமிடத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானதால் அப்பகுதி மக்களிடம் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×