search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தஞ்சையில் பாசப்போராட்டம்: 5 கி.மீட்டர் தூரத்துக்கு ஆட்டோவை துரத்தி ஓடி கன்றுக்குட்டியை மீட்ட பசு
    X

    தஞ்சையில் பாசப்போராட்டம்: 5 கி.மீட்டர் தூரத்துக்கு ஆட்டோவை துரத்தி ஓடி கன்றுக்குட்டியை மீட்ட பசு

    • பசு மாட்டை தினமும் காலையில் மேய்ச்சலுக்காக வெளியே அனுப்புவது வழக்கம்.
    • நிறைமாத கர்ப்பமாக இருந்த பசு மாடு தொம்பன்குடிசை பகுதி அருகே திடீர் என பிரசவ வலி ஏற்பட்டு அங்கேயே கன்றுக்குட்டியை ஈன்றது.

    தஞ்சாவூர்:

    உலகில் தாய் பாசத்திற்கு நிகர் எதுவும் இல்லை. தாய்ப்பாசம் அனைத்து உயிர்களுக்கும் ஒன்றுதான். இதனை உணர்த்தும் வகையில், தஞ்சாவூரில் கன்றுக்குட்டியை ஆட்டோவில் எடுத்து சென்ற உரிமையாளரை பின்தொடர்ந்து, 5 கி.மீட்டர் தூரத்திற்கு ஓடிய தாய் பசுவின் பாசம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-

    தஞ்சை செக்கடியை சேர்ந்தவர் சபரிநாதன். ஆட்டோ டிரைவர். இவரது வீட்டில் லெட்சுமி என்ற பசுமாடு ஒன்று உள்ளது. இவர் தனது மாட்டை வீட்டில் ஒரு குழந்தையை போல வளர்த்து வருகிறார். இந்நிலையில், இந்த பசு மாட்டை தினமும் காலையில் மேய்ச்சலுக்காக வெளியே அனுப்புவது வழக்கம்.

    அப்போது, பசு மாடு நிறைமாத கர்ப்பமாக இருந்த நிலையில், பசு மாடு தொம்பன்குடிசை பகுதி அருகே திடீர் என பிரசவ வலி ஏற்பட்டு அங்கேயே கன்றுக்குட்டியை ஈன்றது. இதை தொடர்ந்து, பசுவை வெகுநேரம் காணவில்லை என்று சபரிநாதன் பல பகுதிகளில் தேடி பார்த்தார். அப்போது ஈன்ற கன்றுக்குட்டியுடன் பசு நின்று கொண்டிருந்தை பார்த்தார்.

    இதையடுத்து, கன்றுக்குட்டியை மீட்டு அதை ஆட்டோவில் வைத்து வீட்டிற்கு புறப்பட்டார். இதை கண்ட தாய்ப்பசு பாசத்தினால் ஆட்டோவை பின் தொடர்ந்து ஓடிக்கொண்டே சுமார் 5 கி.மீட்டர் தூரம் வரை பின் தொடர்ந்து சென்று ஆட்டோவையும் வழி மறித்தது.

    பின்பு சபரிநாதன், கன்றுக்குட்டியை பசுவிடம் இறக்கி விட்டார். அதையடுத்து, கன்றுக்குட்டியைப் பசுமாடு பாசத்தோடு அரவணைத்து பாலூட்டியது. பின்னர் பசுமாடும், கன்றுக்குட்டியும் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டது.

    இந்த சம்பவம் அப்பகுதியில் காண்போரை மெய்சிலிர்க்கவும், வியக்கவும் செய்தது. தஞ்சையில் பசு மாட்டின் இந்த பாச போராட்டம், பார்ப்போரை மனம் நெகிழ வைத்துள்ளது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×