என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பேரணி நடத்த அனுமதிக்க கோரிக்கை: போலீசாரை அணுகும்படி கம்யூனிஸ்டுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்
    X

    பேரணி நடத்த அனுமதிக்க கோரிக்கை: போலீசாரை அணுகும்படி கம்யூனிஸ்டுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

    • பேரணி, பொதுக்கூட்டம் போன்ற நிகழ்வுகளுக்கு டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து அனுமதி அளிக்கப்படாது.
    • ஒருவேளை அனுமதி கேட்கும் தேதியில் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் இருந்தால் மாற்று தேதியில் வழங்கலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 60-வது ஆண்டை முன்னிட்டும், மத்திய அரசின் மதவாத கொள்கைகளை கண்டித்தும், மாநிலம் முழுவதும் அக்டோபர் 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை பிரசார பயணங்கள், பேரணி நடத்த அனுமதி கோரி தமிழக டி.ஜி.பி.-க்கு அக்டோபர் 10-ந்தேதி மனு அளிக்கப்பட்டது.

    அதற்கு எந்த பதிலும் இல்லாததால், இந்த மனுவை பரிசீலித்து, பேரணிக்கு அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, டி.ஜி.பி. பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பேரணி, பொதுக்கூட்டம் போன்ற நிகழ்வுகளுக்கு டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து அனுமதி அளிக்கப்படாது.

    இது போன்ற நிகழ்வுகளுக்கு உள்ளூர் காவல் நிலையம் அல்லது காவல் ஆணையரிடம் தான் மனு அளிக்க வேண்டும். உள்ளூர் சூழ்நிலையை பொறுத்து அவர்கள் முடிவெடுப்பார்கள்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டால் உள்ளூர் சூழலை பொறுத்து முடிவு செய்யுமாறு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது என்று அரசு வக்கீல் கூறினார்.

    இதனையடுத்து, உள்ளூர் காவல்துறையிடம் மனு அளிக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதி அவ்வாறு அளிக்கப்படும் மனுவை பரிசீலித்து 7 நாட்களில் அனுமதி வழங்குமாறு உத்தரவிட்டார்.

    ஒருவேளை அனுமதி கேட்கும் தேதியில் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் இருந்தால் மாற்று தேதியில் வழங்கலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×