search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேல்முறையீடு செய்தும் ரூ.1000 கிடைக்கவில்லையா... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
    X

    மேல்முறையீடு செய்தும் ரூ.1000 கிடைக்கவில்லையா... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்

    • தகுதியுள்ள எல்லோருக்கும் உரிமைத் தொகை கிடைக்கிற வரை திராவிட மாடல் அரசின் பணி நிச்சயம் தொடரும்.
    • திராவிட மாடல் ஆட்சியில் இந்தியாவுக்கு எடுத்துக்காட்டான மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து வளரும்.

    சென்னை:

    குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கி வைத்திருந்தார். இதில் 1 கோடியே 6 லட்சத்து 49 ஆயிரத்து 242 பேருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

    இதில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில் இப்போது புதிய பயனாளிகளாக 7 லட்சத்து 35 ஆயிரத்து 58 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் நேற்றே ரூ.1000 சென்றடைந்துள்ளது.

    இதன் தொடக்க விழா தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து இதில் 6 மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார். அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

    குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று தேர்தலுக்கு முன்பு சொன்னோம். அப்போது சிலர் என்ன சொன்னார்கள் என்றால், இதெல்லாம் நிறைவேற்ற முடியாத வாக்குறுதி. இவர்கள் ஆட்சிக்கு வரவே மாட்டார்கள். இதுமாதிரி ஒவ்வொருவரும் நிறைய சொன்னார்கள். கட்டம் எல்லாம் பார்த்தார்கள்.

    ஆனால் நீங்கள் எல்லோரும் என்ன சொன்னீர்கள். என்றால், தி.மு.க.தான் ஆட்சிக்கு வரவேண்டும். தி.மு.க. சொன்னால் வாக்குறுதியை நிறைவேற்றும். கலைஞர் மகன் ஸ்டாலின் தான் முதலமைச்சராக வரவேண்டும் என்று ஓட்டு போட்டு பதிலடியும் தந்தீர்கள்.

    உங்களுடைய கட்டளைக்கு கட்டுப்பட்டவன் நான். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொன்னால், சொன்னதை நிச்சயம் செய்வேன். அதற்கு அடையாளமாகத்தான் மாதந்தோறும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை கொடுக்கிறோம்.

    அதனால்தான் உங்கள் முன்னாடி கொஞ்சம் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறேன். கடந்த செப்டம்பர் 15-ந்தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தேன்.

    செப்டம்பர் 15, அக்டோபர் 15 என 2 மாதத்துக்கும் 2 ஆயிரம் ரூபாயை 1 கோடியே 6 லட்சம் சகோதரிகள் வாங்கிவிட்டார்கள். இந்த முறை முன்கூட்டியே இன்று மாலைக்குள் அடுத்த 1000 ரூபாயும் வந்து சேர்ந்து விடும். மகளிருக்கு சொத்துரிமை, கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு கொடுத்து உங்களுடைய உரிமைகளுக்காக பாதுகாவலராக இருந்த தமிழினத் தலைவர் கலைஞருடைய நூற்றாண்டு விழாவில் தொடங்கி கொடுக்கப்படுகிற தொகை இதுவாகும். இது உதவித் தொகையல்ல. உரிமைத் தொகை.

    இந்த உரிமைத் தொகை உண்மையிலேயே தேவையும், தகுதியும் உள்ள அனைத்து மகளிருக்கும் போய் சேர வேண்டும் என்பதில் நம்முடைய அரசு கவனமாக இருந்தது.

    வி.ஏ.ஓ. அலுவலகம் தாலுகா அலுவலகம் என எங்கேயும் அலையாமல் பொதுமக்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று அரசே உங்களிடம் வந்து விண்ணப்பங்களை வாங்கினார்களோ அதே மாதிரி அந்த விண்ணப்பங்களை வாங்குவதற்கு முகாம்களை அமைக்க சொன்னேன்.

    கடந்த ஜூலை 24-ந்தேதி தர்மபுரி மாவட்டம் தோப்பூரில் அந்த முகாமை நானே தொடங்கி வைத்தேன். ஏறக்குறைய 1 கோடியே 63 லட்சம் மகளிர் விண்ணப்பித்தார்கள். இதற்கும் சிலர் விமர்சனம் செய்தார்கள்.

    தகுதி உள்ள மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று சொன்னதை தேர்தல் வாக்குறுதிக்கு முரணாக செய்வதாக பேசினார்கள். நாம் தொடக்கத்தில் இருந்து தெளிவாக சொன்னோம். தகுதி உள்ளவர்கள் யார் என்று நேர்மையான பாரபட்சமற்ற விதிமுறைகள்.

    அந்த அடிப்படையில் அரசு சார்பில் வெளியிட்டு தமிழ்நாட்டில் உள்ள அத்தனை குடும்ப அட்டைதாரர்களையும் விண்ணப்பிக்க சொன்னோம். இந்த திட்டத்தின் நோக்கத்தையும், விதிமுறைகளின் குறிக்கோளையும், மக்கள் உள்ளார்ந்து புரிந்து கொண்ட காரணத்தால் 2 கோடியே 24 லட்சம் குடும்ப அட்டைதாரர்களில் 1 கோடி 63 மகளிர் மட்டும் விண்ணப்பித்தார்கள்.

    மக்களுடைய இந்த புரிதலே திட்ட விதிமுறைகளுக்கான நியாயத்தை வெளிப்படுத்தியது. விமர்சித்தவர்கள் அமைதியாகி விட்டனர். இப்படி விண்ணப்பித்தவர்களில் இருந்து 1 கோடியே 6 லட்சத்து 58 ஆயிரத்து 375 தகுதி உள்ள மகளிர் தேர்ந்தெடுக்கப்பட்டு எல்லோருக்கும் அவர்களுடைய வங்கி கணக்கில் இந்தத் திட்டத்துக்கு ஒரு நாள் முன்னாடியே அதாவது செப்டம்பர் 14-ந் தேதியே அந்த மாதத்துக்கான உரிமைத் தொகை 1000 ரூபாயை நாம் வரவு வைத்தோம்.

    அந்த மாதம் வங்கி கணக்கு இல்லாத 2 லட்சத்து 42 ஆயிரத்து 956 பயனாளிகளுக்கு மணியார்டர் மூலம் 1000 ரூபாய் வழங்கப்பட்டது. அடுத்து அக்டோபர் 15-ந்தேதி வங்கிக் கணக்கில் வரவு வைத்தோம். மணியார்டர் மூலம் உரிமைத் தொகை வழங்கப்பட்ட மகளிருக்கு வங்கிக் கணக்கு தொடங்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

    இவ்வளவு பெரிய திட்டம் 1 கோடிக்கும் அதிகமான பயனாளிகள். அவர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய். ஆனால் இதில் எந்த சின்ன புகாருக்கும் இடமில்லை. அதுதான் இந்த திட்டத்தோட மிகப்பெரிய வெற்றி.

    அந்த பெருமிதத்தோடு சொல்கிறேன். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் நாட்டுக்கே முன்னுதாரணமாக அமைந்திருக்கிற திட்டம். ஒரு திட்டம் பெற்ற வெற்றியை தொடர வேண்டும் என்றால், அதை தொடர்ந்து கவனிக்க வேண்டும். அதனால் முகாம்களில் விண்ணப்பித்து தகுதியிருந்தும் தேர்ந்தெடுக்கப்படாத விண்ணப்பதாரர்களுக்கு, முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் பதிவாகாமல் போன விண்ணப்பத்தாரர்களுடைய விண்ணப்பங்களும் தரவுகளோடு தொடர்ந்து சரிபார்க்கப்பட்டது.

    இதற்காக மட்டும் அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த ஏறக்குறைய 54 ஆயிரத்து 220 அலுவலர்கள் மாவட்ட, கிராம அளவில் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் அதை சரிபார்த்து ஒரு பட்டியலை எங்களிடம் வழங்கினார்கள். அதில் இந்த மாதத்தில் இருந்து 7 லட்சத்து 35 ஆயிரம் மகளிர் புதிய பயனாளிகளாக சேர்க்கப்பட்டார்கள்.

    புதிய பயனாளிகளான என் அன்பு சகோதரிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கான 1000 ரூபாயை நேற்று உங்கள் கணக்கில் வரவு வைத்து விட்டோம். உங்களோடு சேர்த்து மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பேர் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 1000 ரூபாய் இனி வாங்க போகிறீர்கள்.

    நீங்கள் மட்டுமல்லா தகுதியுள்ள யாரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். அதனால்தான் விண்ணப்பித்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்கிற காரணத்தை குறுஞ்செய்தியாக அனுப்பி வைத்தோம்.

    அந்த காரணம் ஏற்புடையதா? இல்லை என்றால் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கினோம். அதை பயன்படுத்தி மேல்முறையீடு செய்தார்கள். அவர்களது விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம். சரிபார்ப்பு அலுவலர்கள் கள ஆய்வு செய்து தகுதிபெறும் மகளிருக்கு வருகிற டிசம்பர் மாதத்தில் இருந்து திட்டம் மூலமாக 1000 ரூபாய் வழங்கப்படும்.

    தகுதியுள்ள எல்லோருக்கும் உரிமைத் தொகை கிடைக்கிற வரை திராவிட மாடல் அரசின் பணி நிச்சயம் தொடரும். கடந்த மார்ச் 27-ந்தேதி சட்டமன்றத்தில் இந்த திட்டத்தை பற்றி பேசும் போது, ஏறத்தாழ 1 கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கிடும் வகையில் இந்த திட்டம் அமையும் என்று நான் சொன்னேன்.

    ஆனால் இன்றைக்கு 1 கோடி 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதான் இந்த திட்டத்தோட மிகப்பெரிய வெற்றி. இதே மாதிரியான திட்டம் வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்ட போது, பொதுமக்கள் கூட்ட நெரிசலில் எப்படியெல்லாம் இன்னல்களுக்கு ஆளானார்கள், அலைக்கழிக்கப்பட்டார்கள் என்பதை பார்த்தோம். அது மாதிரி எந்த நிகழ்வும் இல்லாமல் அமைதியான முறையில் அனைத்து தகுதியான மகளிருக்கும் இந்த திட்டம் சென்று சேர்ந்து உள்ளது.

    எந்தவிதமான சர்ச்சைக்கும் இடமளிக்காத வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்தி காட்டிய பெருமை, அரசு அலுவலர்களையும் பணியாளர்களையும்தான் போய் சேரும்.

    இந்த திட்டத்துக்கு பொறுப்பேற்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் தம்பி உதயநிதி, அரசு அலுவலர்களோடு இந்த திட்டத்தை இதனுடைய செயல்பாடு குறித்து தொடர்ந்து ஆய்வுக் கூட்டம் நடத்திக் கொண்டிருப்பார். அவருக்கு வாழ்த்துக்கள்.

    தொடர்ந்து களத்திலும் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். அது இனியும் தொடர வேண்டும். தொடரும் அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இது ஊர் கூடி இழுத்த தேர். ஊருக்காக நம்முடைய திராவிட மாடல் அரசு உருவாக்கிய தேர். மக்களின் தேர் இது.

    மிகப்பெரிய சாதனையை அமைதியாக செய்து காட்டி இருக்கிறோம். திராவிட மாடல் ஆட்சியில் இந்தியாவுக்கு எடுத்துக்காட்டான மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து வளரும். தமிழ்நாடு முழுவதும் இன்று நிகழ்ச்சியில் பங்கேற்ற சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் உங்களில் ஒருவனான இந்த ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்து விடைபெறுகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர் பாபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×